Last Updated : 10 Mar, 2019 07:58 AM

 

Published : 10 Mar 2019 07:58 AM
Last Updated : 10 Mar 2019 07:58 AM

வேட்பாளர் தேர்வு செய்ய லாலுவுக்கு அதிகாரம்- ஆர்ஜேடி கூட்டத்தில் முடிவு

பிஹார் மாநிலம் பாட்னாவில் ஆர்ஜேடி கட்சியின் மத்திய நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், ஆர்ஜேடி கட்சியின் கூட்டணி வைக்கும் கட்சிகள் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது. பின்னர் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் அதிகாரம், கூட்டணி கட்சிகளைத் தேர்வு செய்யும் அதிகாரம் ஆகியவற்றை கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு வழங்க ஏகமனதாக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து மக்களவைத் தேர்தல், சட்டப் பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை லாலு தேர்வு செய்து அறிவிப்பார்.

இதுகுறித்து கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான மனோஜ் ஜா கூறும்போது, “ஆர்ஜேடி கட்சியின் கொள்கை, கருத்துகளுடன் ஒத்துப்போகும் கட்சிகளுடன் கூட்டணி வைப்போம். கூட்டணிக் கட்சிகளை தேர்வு செய்யும் அதிகாரம், கட்சித் தலைவர் லாலுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. விரைவில் கூட்டணிக் கட்சிகள் தேர்வு செய்யப்படும் என நம்புகிறோம்” என்றார்.

மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் சிக்கியுள்ள லாலு பிரசாத் யாதவ் தற்போது சிறையில் உள்ளார். அவரை ஆர்ஜேடி கட்சியின் மூத்த தலைவர்கள் அடிக்கடி சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலையில் ஆர்ஜேடி தலைவர்கள், லாலுவைச் சந்தித்து தற்போதைய அரசியல் நிலவரங்களை அவருக்கு எடுத்துரைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x