Published : 22 Feb 2019 08:31 AM
Last Updated : 22 Feb 2019 08:31 AM

கர்நாடகாவில் வேட்பாளர் தேர்வில் அமித்ஷா தீவிரம்

கர்நாடகாவில் மக்களவைத் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவதால் 28 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில், கடந்த ஒரு மாதமாக‌ மாநில தலைவர் எடியூரப்பா ஈடுபட்டிருந்தார்.

அண்மையில் நடந்த பாஜக உயர்நிலைக் குழுக் கூட்டத்தில், தற்போது எம்.பி.யாக இருப்பவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்குவது, புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்குவது, வயது முதிர்ந்தவர்களுக்கு ஓய்வு அளிப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அதில், தற்போது எம்.பி.யாக இருப்பவர்களுக்கு வாய்ப்பு வழங்க அனைவரும் சம்மதம் தெரிவித்த நிலையில், கட்சி மேலிடம் ஒரு சில தொகுதிகளில் வேட்பாளரை மாற்ற முடிவெடுத்தது. அதாவது, பீஜாப்பூர், பாகல்கோட்டை,மைசூரு ஆகிய தொகுதிகளில் வேட்பாளர்கள் மீது அதிருப்தி நிலவுவதால் அங்கு வேறு வேட்பாளர்களை நிறுத்த பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ள‌து. 28 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்வதில் மாநிலத் தலைவர் எடியூரப்பா, முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா, மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் ஆகியோர் இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. ஒவ்வொருவரும் தங்களது ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு வழங்குவதில் அக்கறை காட்டுவதாக பாஜக மேலிடத்துக்கு புகார் அனுப்பப்பட்டது. இதையடுத்து, நேற்று மாலை பெங்களூரு வந்த பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, பாஜகமூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது 28 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

குறிப்பாக, காங்கிரஸ் - மஜத கூட்டணியை சமாளிக்கும் வகையில், திறமையாக செயல்படும் வேட்பாளர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்க முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x