Published : 28 Mar 2019 12:01 PM
Last Updated : 28 Mar 2019 12:01 PM

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் தேதியை மாற்றக்கோரிய மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை வேறு தேதியில் நடத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி மக்களவைத் தேர்தலும், 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்தவர்கள் புனிதமாக கொண்டாடும் புனித வியாழன் பண்டிகை தினமான ஏப்ரல் 18-ம் தேதி நடத்த உள்ள தேர்தலை மாற்றி வைக்கக் கோரி, கிறிஸ்தவ மக்கள் களம் என்ற அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

கிறிஸ்தவ பள்ளிகளிலும் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்படுவதால், இந்த பள்ளிகளுடன் இணைந்து இருக்கும் தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் வழிபாடு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், தேர்தலை மாற்றி வைக்க வேண்டும் என கிறிஸ்தவ மக்கள் களம் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும், தேர்தல் பணி காரணமாக, அரசுப் பணியிலும், ஆசிரியர் பணியிலும் இருக்கும் கிறிஸ்தவர்கள், இந்த வழிபாடுகளில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணிய பிரசாத் அடங்கிய அமர்வு முன்பு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது.

ஏற்கெனவே இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டி, இந்த மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x