Published : 22 Mar 2019 06:12 PM
Last Updated : 22 Mar 2019 06:12 PM

குளத்தில் குளிக்க மறுக்கும் மாடு போல் உள்ளது: பெரியகுளம் வேட்பாளர் மாற்றம் குறித்து தினகரன் கிண்டல்

பெரிய கூட்டணி என்கிறார்கள், ஓபிஎஸ்ஸின் சொந்த ஊரான பெரியகுளம் தொகுதியிலேயே வேட்பாளர் போட்டியிடாமல் விலகி ஓடுகிறார். இவையெல்லாம் தோல்விக்கான அறிகுறி என டிடிவி தினகரன் பேட்டி அளித்தார்.

சென்னையில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேட்டி அளித்த டிடிவி தினகரன் பேசியதாவது:

''மே 23-ல் அனைவரும் தூக்கிப்பிடிக்கும் கட்சிகள் வீழப்போவது உண்மை. தங்க தமிழ்ச்செல்வனை வெயிட்டான வேட்பாளரா என்று கேட்கிறீர்கள். அவர் அனைத்து வகையிலும் தகுதியானவர். அவரை பணமூட்டை வைத்துக்கொண்டு வரும் ஆட்களுடன் ஒப்பிடுவது தங்க தமிழ்ச்செல்வனுக்கு அவமானம்.

ஆர்.கே. நகருக்கு நான் பலமுறை சென்று வந்துள்ளேன். அங்கு 20 ரூபாய் நோட்டை போட்டு பிரச்சினை செய்வது எல்லாம் மதுசூதனன் ஆட்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

மதுவிலக்கு பற்றி தேர்தல் அறிக்கையில் அறிவித்தால் மிடாஸை மூடுவீர்களா என கேட்கிறீர்கள். நான் மிடாஸ் ஆலை பார்ட்னராக இருந்தால் தாரளமாக இந்தக் கேள்வியைக் கேட்கலாம். என் குடும்பத்தில் யாரோ நடத்துவதற்கு எல்லாம் நான் மூடச்சொல்லமுடியுமா?

பெரிய கூட்டணி என்கிறார்கள். ஆளுங்கட்சி வேட்பாளர் சொந்த ஊரிலேயே பணமூட்டையுடன் இறங்குகிறார். ஆளுங்கட்சியின் சொந்த வேட்பாளர் பெரியகுளம் தொகுதியில் வரமாட்டேன் என்கிறார். அதை பெரிய கூட்டணி என்று சொல்கிறார்கள்.

துணை முதல்வரின் சொந்த தொகுதி. அவர் ஊரிலேயே வேட்பாளர் வர மறுக்கிறார். கிராமங்களில் பார்க்கலாம். குளத்தில் மாட்டைக் குளிப்பாட்டச் செல்லும்போது அது வர மறுக்கும். கயிற்றால் இழுப்பார்கள். அதுபோன்று இருக்கிறது அந்த வேட்பாளர் செயல்.

அதுவும் மிகப்பெரிய தேசியக்கட்சியான பாஜக இருக்கும் கட்சி. மேலும்,  பாமக -தேமுதிகவுடன் கூட்டணி. இன்னும் யார் யாரையோ வீடுவீடாகப் போய் சந்தித்து கூட்டணி வைக்கிறார்கள்.

துணை முதல்வரின் சொந்த தொகுதி, அவர் மகன் நிற்கும் தொகுதி. அங்கு சட்டப்பேரவைக்குப் போட்டியிட வேட்பாளர் வர மறுக்கிறார். இதையெல்லாம் அவரிடம் கேட்க மாட்டீர்களா? ஆட்சி மாற்றத்தின் அறிகுறி பெரியகுளத்திலிருந்து தொடங்குகிறது.

எங்கள் வேட்பாளரை அறிவித்தோம். அதிமுக வேட்பாளர் மாற்றம் என்கிறார்கள். அம்மாவின் ஆட்சி என அறிவித்தார்கள். ஆனால் பாமக வீடு தேடிபோய் கூட்டணி அமைக்கிறார்கள். ஜெயலலிதா குற்றவாளி என அவர் நினைவிடத்தை எதிர்த்து வழக்கு போட்டவர்களுடன் கூட்டணி.

பெரிய கட்சி என்கிறார்கள், ஆளுங்கட்சி என்கிறார்கள். அது பணமூட்டை கூட்டணி. இன்னொரு கூட்டணி அது புளுகுமூட்டை கூட்டணி. ஆளுங்கட்சியில் வேட்பாளரே ஓடுகிறார். எங்கள் ஆள் ஓடுகிறார் என்றால் நாங்க சாதாரணமானவர்கள். எங்கள் கட்சி வேட்பாளர் ஓடினால் தகும். ஆனால் அவர்கள் கட்சியிலிருந்து ஓடுகிறார்கள்''

இவ்வாறு டிடிவி தினகரன் பேசினார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x