Last Updated : 22 Mar, 2019 09:09 AM

 

Published : 22 Mar 2019 09:09 AM
Last Updated : 22 Mar 2019 09:09 AM

நேருவின் கடைசித் தேர்தல்

இந்தியாவின் மூன்றாவது பொதுத் தேர்தல், மக்களவைக்கும் பல மாநிலங்களின் சட்டப் பேரவைகளுக்கும் சேர்ந்தே நடந்தது. 1962 பிப்ரவரி 19 முதல் 25 வரை நடந்த இந்தத் தேர்தலில், மக்களவையின் 494 தொகுதிகளுக்கு 28 கட்சிகள் போட்டியிட்டன. காங்கிரஸ் கட்சி 361 தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. மூன்றாவது முறையாகப் பிரதமரானார் நேரு. எனினும், இரண்டே ஆண்டுகளில் அவர் மறைந்தது பெரும் சோகம்.

இந்தத் தேர்தலில், காங்கிரஸுக்கு வாக்குகள் 44.7% கிடைத்தாலும் முந்தைய தேர்தலுடன் ஒப்பிடுகையில் காங்கிரஸுக்குத் தொகுதிகள் எண்ணிக்கை சற்றே குறைந்தது. கிரிக்கெட் ஸ்கோர் பலகை போல, டெல்லியின் கன்னாட் ப்ளேஸ் பகுதியில் தேர்தல் முடிவுகள் ஒரு பெரிய கரும்பலகையில் உடனுக்குடன் வெளியிடப்பட்டன என்பது ஒரு சுவாரஸ்யச் செய்தி.

காங்கிரஸின் முதுபெரும் தலைவர் ராஜாஜி தொடங்கிய சுதந்திரா கட்சி இந்தத் தேர்தலில் 18 தொகுதிகளைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்க நிகழ்வு. ‘பர்மிட், லைசென்ஸ், கோட்டா ராஜ்’ என்று காங்கிரஸ் அரசை அடையாளப்படுத்தினார் ராஜாஜி. சுதந்திரமான தாராளமயத் தொழில் கொள்கையை அனுமதிக்க வேண்டும், தனியார்த் துறையை ஊக்குவிக்க வேண்டும் என்ற அவருடைய கொள்கைக்குத் தமிழ்நாட்டைவிட குஜராத்திலும் ராஜஸ்தானிலும் மகாராஷ்டிரத்திலும் ஆதரவு அதிகம். பெரும் பணக்காரர்கள், நிலச்சுவான்தாரர்கள், முன்னாள் மன்னர்கள், நிலவுடைமையாளர்கள், படித்தவர்கள் மத்தியில் அக்கட்சிக்கு செல்வாக்கு ஏற்பட்டது.

இந்திய அரசியல் அரங்கில் ஏகபோகமான கட்சியாக இருந்த காங்கிரஸுக்கு வலதுசாரி, இடதுசாரி மற்றும் மாநிலக் கட்சிகளால் போட்டி ஏற்படும் என்பதற்கான அறிகுறிகள் இந்தத் தேர்தலிலேயே தெரியத் தொடங்கிவிட்டன. கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து செல்வாக்குடன் இருந்தது. பாரதிய ஜனசங்கம் மெதுவாக வலுவடையத் தொடங்கியது. தமிழகத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ் 31 மக்களவைத் தொகுதிகளில் வென்றது. திமுகவுக்கு ஏழு இடங்கள் கிடைத்தன. 1962 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 139 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. காமராஜர் மீண்டும் முதல்வரானார். திமுக 50 இடங்களில் வென்று தமிழக அரசியலைத் திரும்பிப்பார்க்க வைத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x