Last Updated : 06 Mar, 2019 08:51 AM

 

Published : 06 Mar 2019 08:51 AM
Last Updated : 06 Mar 2019 08:51 AM

என் மீது தாக்குதல் நடத்தும் எதிர்க்கட்சிகள்- பிரதமர் மோடி குற்றச்சாட்டு

தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்த நான் திட்டமிட்டு வரும் நிலையில், எதிர்க்கட்சியினர் என் மீது தாக்குதல் நடத்துகின்றனர் என பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டி உள்ளார்.

பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியவிமானப்படை கடந்த 26-ம் தேதி எல்லையைத் தாண்டிச் சென்று பாகிஸ்தானின் பாலகோட் அருகே உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பயிற்சி முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 350 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.

எனினும், இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை. அதேநேரம் உயிரிழப்பு குறித்து சில வெளிநாட்டு ஊடகங்கள் சந்தேகம் எழுப்பி இருந்தன. இதையடுத்து, இந்தத் தாக்குதல் குறித்தவிவரங்கள் மற்றும் அதன் பாதிப்புகள் குறித்த தகவலை வெளியிடுமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் கபில் சிபல் மற்றும் திக்விஜய் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் தாக்குதலுக்கான ஆதாரங்களை கேட்டுள்ளனர். விமானப்படை தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை பற்றி தெரிந்துகொள்ள நாட்டு மக்களுக்கு உரிமை உள்ளதுஎன பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிவசேனாவும் வலியுறுத்தி உள்ளது. இதில் 250 தீவிரவாதிகள் உயிரிழந்ததாக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்திருந்தார்.

இதனிடையே, மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு ஆதாயம் கிடைக்கும் என்பதை கருத்தில் கொண்டுதான் பிரதமர் மோடி தலைமையிலான அரசு விமானப்படை தாக்குதல் நடத்தி உள்ளது என எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர்.

இதுகுறித்து பிரதமர் மோடி நேற்று முன்தினம் அகமதாபாத்தில் கூறும்போது, “பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது கடந்த 2016-ல் முதல் முறையாக துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது எந்தத் தேர்தல் நடந்தது? கடந்த 40 ஆண்டுகளாக தீவிரவாதத்தால் நாம் பாதிக்கப்பட்டுள்ளோம். ஆட்சியைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. நம் நாட்டின் பாதுகாப்பு பற்றிதான் நான் கவலைப்படுகிறேன்” என்றார்.

இந்நிலையில், பிரதமர் மோடி நேற்று உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கிவைத்தார்.

இதைத் தொடர்ந்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பென்ஷன் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். பின்னர் விழாவில் அவர் பேசும்போது, “அவர்கள் (எதிர்க்கட்சிகள்) என் மீது தாக்குதல் நடத்துவதில் குறியாக உள்ளனர். நான் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறேன்.

நான் மக்கள் காப்பாளனாக இருக்கிறேன். நாட்டிலிருந்து வறுமையை ஒழிக்க போராடி வருகிறேன். ஆனால் என்னை ஒழிக்க எதிர்க்கட்சியினர் தொல்லை கொடுத்து வருகின்றனர். அதனால்தான் மோடியை விரட்டுங்கள் என்று பேசி வருகின்றனர். அவர்கள் எண்ணம் பலிக்காது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x