Published : 16 Mar 2019 08:49 AM
Last Updated : 16 Mar 2019 08:49 AM

3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த கோரி திமுக வழக்கு: தேர்தல் ஆணையம் 2 வாரத்துக்குள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதி களின் இடைத்தேர்தலை நடத்து வது குறித்து 2 வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள தேர்தல் வழக்கை காரணம் காட்டி அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைத்துள்ளது.

இந்நிலையில், இந்த 3 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18-ம் தேதியே இடைத்தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அடங்கிய அமர்வில் நேற்று நடந்தது. அப்போது திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி, ‘‘இந்த 3 தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்தக்கூடாது என யாருமே வழக்கு தொடரவில்லை. தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரிதான் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கை காரணம் காட்டி 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை தலைமை தேர்தல் ஆணையம் அறிவிக் காமல் நிறுத்தி வைத்திருப்பது விசித்திரமானது. எனவே, வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி முடிவதற்குள் இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’’ என வாதிட்டார்.

தேர்தல் ஆணையம் தரப் பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘இந்த 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்துவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. எனவே, இதுதொடர்பாக பதிலளிக்க 4 வாரம் அவகாசம் தேவை’’ என்றார். அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, ‘‘அதற்குள் தேர்தலே முடிந்துவிடும். எனவே, இந்த வழக்கை விரைவாக விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும்’’ என்றார்.

அதையடுத்து நீதிபதிகள், ‘‘இதுதொடர்பாக தலைமை தேர்தல் ஆணையத்துக்கு யாரோ தவறாக சட்ட ஆலோசனை வழங்கியுள்ளனர்’’ என கருத்து தெரிவித்தனர். பின்னர், ‘‘இந்த 3 தொகுதிகளுக்கும் ஏப்.18-ம்தேதியே இடைத்தேர்தலை நடத் துவது குறித்து தேர்தல் ஆணையம் 2 வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x