Published : 19 Mar 2019 12:35 PM
Last Updated : 19 Mar 2019 12:35 PM

உதவாக்கரை திமுக தேர்தல் அறிக்கை; அரைவேக்காடானது: அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

திமுக தேர்தல் அறிக்கை அரைவேக்காட்டுத் தனமாக உள்ளதாகவும், இது ஓர் உதவாக்கரையான அறிக்கை என்றும் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையை இன்று (செவ்வாய்க்கிழமை) அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், ''அதிமுக அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்ற வகையில் தேர்தல் அறிக்கையைத் தயாரித்து வெளியிட்டுள்ளது. இரட்டை இலைக்கு ஓட்டு போட்டால் மாதம் ரூ.1,500 வழங்கப்படும் என்பதை மறக்க வேண்டாம்.

திமுக தமிழருக்கு எதிரான செயல்களையே செய்துவருகிறது. அவர்களின் தேர்தல் அறிக்கை அரைவேக்காட்டுத் தனமானது. உதவாக்கரை அறிக்கையாக உள்ளது. நாங்கள் தமிழை ஆட்சி மொழியாக அறிவிப்போம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளோம். ஆனால் அவர்கள் தமிழை இணைமொழியாக அறிவிப்போம் என்று வாக்குறுதி அளித்திருப்பது துரோகம். அது என்ன ஆட்சி இணை மொழி?

தமிழர்கள் மீது உண்மையான பாசம் கொண்டவர்கள் அதிமுகவினர்தான். திமுக - காங்கிரஸ் கூட்டணி சேர்ந்து ஒன்றரை லட்சம் பேரைக் கொன்ற உணர்வு குற்ற உணர்வாய் அவர்களைக் குத்துவதால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சர்வதேச நீதிமன்றத்தில் திமுக, காங்கிரஸை நிறுத்தித் தண்டனை பெற்றுத் தருவோம். லட்சக்கணக்காக தமிழர்களைக் கொன்று குவித்ததற்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டிய காலம் விரைவில் வரும்'' என்றார் ஜெயக்குமார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x