Published : 12 Mar 2019 09:35 AM
Last Updated : 12 Mar 2019 09:35 AM

ஜனநாயக திருவிழாவில் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பொதுமக்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வேண்டுகோள்

ஜனநாயக திருவிழாவான மக்கள வைத் தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நாடாளுமன்ற மக்களவைக்கான பொதுத் தேர்தல் வரும் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி முதல் ஆளாக ட்விட்டரில், , “ஜனநாயக திருவிழாவான மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அனைவரும் தவறாமல் பங்கேற்று தங்கள் வாக்குகளை செலுத்த வேண்டும். குறிப்பாக, முதல்முறையாக வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “ஜனநாயக திருவிழாவை கொண்டாட நாடு தயாராகி விட்டது. இந்தியாவை புதிய இந்தியாவாக மாற்ற வல்ல அரசை தேர்ந்தெடுக்க இந்தத் திருவிழாவில் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, “17-வது மக்களவைத் தேர்தல் அறிவிப்பை வரவேற்கிறேன். நாட்டு மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால், “நமது ஜனநாயகத்தின் உண்மையான அதிகாரம் இறுதியாக மீண்டும் மக்கள் கைக்கு திரும்பி உள்ளது. சர்வாதிகார மற்றும் மக்கள் விரோத மத்திய அரசை அகற்றுவதற்கு இதுதான் சரியான தருணம்” என பதிவிட்டுள்ளார்.

ஒடிசா முதல்வரும் பிஜு ஜனதா தள தலைவருமான நவீன் பட்நாயக், “ஒடிசா சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. ஜனநாயகத்தின் அடித்தளமாக விளங்கும் தேர்தல் நடைமுறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன்” என பதிவிட்டுள்ளார்.

பஞ்சாப் முதல்வர் (காங்கிரஸ்) அமரிந்தர் சிங், “பஞ்சாபில் மே 19-ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலுக்கு நாங்கள் தயாராக உள் ளோம். இங்குள்ள 13 மக்களவை தொகுதியிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என உறுதியாக நம்புகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

கர்நாடக முதல்வரும் மதச்சார்பற்ற ஜனதா தள தலைவருமான எச்.டி.குமாரசாமி கூறும்போது, “மற்றொரு தேர்த லுக்கு இந்தியா தயாராகிவிட்டது. இந்த ஜனநாயக போர் நியாயமான முறையில் நடைபெறும் என நம்புகிறேன். அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் தேர்தல் ஆணையத்தின் விதிமுறை களை பின்பற்றி, ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும். வாக்காளர்களின் முடிவுக்கும் மதிப்பளிக்க வேண்டும்” என்றார்.

தேசிய மாநாடு கட்சியின் மூத்த தலைவர் உமர் அப்துல்லா ட்விட்டரில், “1996-ம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த நேரத்தில் அறிவிக்கப் படவில்லை. பிரதமர் மோடி வலிமையான தலைவர் என்று அடுத்த முறை புகழ்வதற்கு முன்பு, மக்கள் இதை மனதில் கொள்ள வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x