Last Updated : 15 Mar, 2019 10:18 AM

 

Published : 15 Mar 2019 10:18 AM
Last Updated : 15 Mar 2019 10:18 AM

உ.பி.யில் எஸ்பி, பிஎஸ்பி, காங்கிரஸுடன் இன்னும் சேராத இடதுசாரிகள் பொது வேட்பாளரை நிறுத்த யோசனை

உ.பி.யில் சமாஜ்வாதி (எஸ்பி) பகுஜன் சமாஜ் (பிஎஸ்பி) மற்றும் காங்கிரஸால் அமைந்த கூட்டணிகளில் இடதுசாரிகள் இன்னும் சேர்க்கப்படவில்லை. இதனால், இடதுசாரிக் கட்சிகள் சார்பில் பொது வேட்பாளர்களை நிறுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) யோசனை அளித்துள்ளது. இதன் மீதான இறுதி முடிவு இன்று எடுக்கப்பட உள்ளது.

உ.பி.யில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் மாயாவதியின் பிஎஸ்பியுடன் அகிலேஷின் எஸ்பியும், அஜித் சிங்கின் ராஷ்டிரிய லோக் தளமும் இணைந்து கூட்டணி அமைத்துள்ளன. இவர்களால் ஒதுக்கப்பட்ட காங்கிரஸ் சில சிறிய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைத்து வருகிறது.

எனினும், இந்த இரு கூட்டணிகளாலும் இடதுசாரி கட்சிகள் எதுவும் இன்னும் சேர்க்கப்படவில்லை. இதனால், இடதுசாரிக் கட்சிகள் இணைந்து உ.பி.யின் சில தொகுதிகளில் பொது வேட்பாளர்களை நிறுத்தலாம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ)க்கு, சிபிஎம் சார்பில் யோசனை அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ‘இந்து தமிழ்’இணையதளத்திடம் உ.பி.யின் சிபிஐ நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, ''காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜோதிர்ஆதித்ய சிந்தியாவுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. உ.பி.யில் நாம் கேட்கும் 10 தொகுதிகள் கிடைக்கவில்லை எனில், எஸ்பி, பிஎஸ்பி கூட்டணிக்கு ஆதரவளித்து விட்டு, ஓரிரு தொகுதிகளில் மட்டும் பொது வேட்பாளர்களை நிறுத்துவது குறித்து பரிசீலனை செய்வோம்'' எனத் தெரிவித்தனர்.

உ.பி.யைப் பொறுத்தவரை இடதுசாரிக் கட்சிகளில் சிபிஐக்கு மட்டுமே ஓரளவிற்கு செல்வாக்கு உள்ளது. இதனால், அக்கட்சிக்கு உ.பி.யில் மக்களவை எம்.பி. மற்றும் எம்எல்ஏக்கள் ஓரு சில எண்ணிக்கையில் கிடைத்து வந்தன.

எனினும், கடந்த பல வருடங்களாக சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகளுக்கு உ.பி.யில் இரண்டிலுமே உறுப்பினர்கள் கிடையாது. இந்த தேர்தல்களில் இடதுசாரிகள் ஓரிரு முறை காங்கிரஸ் அல்லது சமாஜ்வாதியுடன் கூட்டு சேர்ந்தும் உ.பி.யில் போட்டியிட்டனர்.

ஆனால், இவர்கள் அனைவருமே பிரதமர் நரேந்திர மோடிக்கு மீண்டும் வாய்ப்பளிக்கக் கூடாது என்ற எண்ணத்தில் இருக்கும் கட்சிகள். எனினும், இந்த தேர்தலில் இடதுசாரிகளை மற்ற கட்சிகளுடன் கூட்டு சேராத சூழல் தெரிகிறது.

எனவே, வரும் மக்களவைத் தேர்தலில் முக்கியமான மூன்று தொகுதிகளில் மட்டும் பொது வேட்பாளர்களை நிறுத்தலாம் என  சிபிஎம் சார்பில் யோசனை அளிக்கப்பட்டுள்ளது.

இடதுசாரிகளைப் பொறுத்தவரை அதன் உ.பி. பிரிவு அளிக்கும் பரிந்துரைகளை தேசிய நிர்வாகம் ஏற்றுக்கொள்வதும் வழக்கமாக உள்ளது. எனவே, தேர்தல் நிலைப்பாடு குறித்து விவாதிக்க உ.பி. சிபிஐ நிர்வாகிகள் இன்று வெள்ளிக்கிழமை லக்னோவில் கூடி இறுதி முடிவு எடுக்க உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x