Last Updated : 30 Mar, 2019 10:14 AM

 

Published : 30 Mar 2019 10:14 AM
Last Updated : 30 Mar 2019 10:14 AM

தேனி மாவட்டத்தில் பிளக்ஸ் பேனருக்கு மாற்றாக துணியில் தயாராகும் தேர்தல் விழிப்புணர்வு விளம்பரம்: மாவட்ட நிர்வாகத்தின் முயற்சிக்கு வரவேற்பு

தேர்தல் விழிப்புணர்வுக்காக துணிகளில் ஓவியர்கள் மூலம் கையால் எழுதப்பட்ட விளம்பரங்களை தயாரிக்க தேனி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் பிளக்ஸ் பேனருக்கு மாற்றாக மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி பலரிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

நூறு சதவீத வாக்குப் பதிவு என்ற இலக்கை அடைய தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதோடு, தேர்தல் நாள் தொடர்பாக நினைவூட்டவும், வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர்களுக்கு தெரியப்படுத்தவும் மாநிலம் முழுவதும் பிளக்ஸ் போர்டு மூலம் விளம்பரம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், தேனி மாவட்ட நிர்வாகம் பிளக்ஸிற்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த துணிகளைப் பயன்படுத்தி விழிப்புணர்வு வாசகங்களை எழுத நடவடிக்கை எடுத்துள்ளது. இதை பலர் வரவேற்றுள்ளனர்.

இந்த விளம்பரப் பணியை சின்னமனூரில் உள்ள ஓவியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். வெள்ளைத் துணியில் ‘தேர்தல் நாள்: 18 ஏப்ரல் 2019, நூறு சதவீதம் வாக்களிப்பு இந்தியர்களின் பெருமை’ என்று எழுதி விளம்பர துணிகள் தயாராகி வருகின்றன. இவை மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும்.

இது குறித்து ஓவியர்கள் சங்க முன்னாள் மாவட்டத் தலைவர் முருகேசன்(70) கூறிய தாவது:முந்தைய காலங்களில் அரசியல்வாதிகளின் முகங்களையும், சின்னங்களையும் கடைக்கோடி கிராமம் வரை எங்கள் ஓவியம்தான் கொண்டு சென்றது. ஆனால், பிளக்ஸ் பேனர் தயாரிப்பு முறை வந்த பிறகு எங்கள் தொழில் முற்றிலும் நசிந்து விட்டது. சுவர் விளம்பரம் மூலம் வருமானம் ஈட்டி வந்த நிலையில், அதற்கும் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துவிட்டது. இதனால் வேலையிழந்து சிரமப்பட்டோம்.

இந்நிலையில், பிளக்ஸ் பேனருக்கு மாற்றாக துணியில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்களை எழுத மாவட்ட நிர்வாகம் முயற்சி எடுத்ததால், சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் எங்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த முறையை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்பதே எங்களின் வேண்டுகோள்" என்றார்.

இவரது மகன் செல்வம்(40) கூறுகையில், ஓவியர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாததால் பலரும் திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வேறு வேலைக்குச் சென்று விட்டனர். இதுபோன்று சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் எங்களுக்கு வாய்ப்பு அளித்தால் திறமைவாய்ந்த ஓவியர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x