Last Updated : 19 Mar, 2019 10:28 AM

 

Published : 19 Mar 2019 10:28 AM
Last Updated : 19 Mar 2019 10:28 AM

ரயில்வே வளர்ச்சி திட்டங்களில் பின் தங்கிய தமிழகம்: சமூக வலைதளங்களில் கொந்தளிக்கும் இளம் வாக்காளர்கள் - மக்களவை தேர்தலில் எதிரொலிக்குமா?

ரயில்வே வளர்ச்சி திட்டங்களில் தமிழகம் மிகவும் பின்தங்கியிருக்கும் விவகாரம் மக்களவை தேர்தல் களத்தில் முக்கிய காரணியாக இளம் வாக்காளர்களால் விவாதிக்கப்படுவதாக ரயில் பயணிகள் சங்கங்கள் தெரிவிக்கின்றன.

ரயில் போக்குவரத்து தொடங்கி 100 ஆண்டுகளுக்கு மேலாகியும், அதன் முக்கியத்துவத்தை தமிழக அரசியல் தலைவர்கள் இன்னும் முழுமையாக உணரவில்லை. தமிழகத்தில் பெரும்பாலான கிராமங்களுக்கு பேரருந்து வசதி இருப்பதால் இதுவே போதும் என்கிற மனப்பான்மை ஒருகாரணம். அந்நாளைய அரசியல் பிரமுகர்களில் பலர் பேருந்து முதலாளிகளாகவும் இருந்ததால் ரயில் போக்குவரத்தைத் தங்களுடைய தொழிலுக்குப் போட்டியாக கருதி, அதன் வளர்ச்சியில் அக்கறை காட்டாமல் இருந்திருக்கலாம் என்பது மற்றொரு காரணம்.

ஒருங்கிணைப்பு இல்லைரயிலைப் பயன்படுத்துவோர் ஏன் குறைவு என்று எந்த மார்க்கத்திலும் யாரும் சர்வே எடுப்பதில்லை. ரயில் நிலையங்களுக்குச் செல்ல சரியான போக்குவரத்து வசதி, பகல் நேரங்களில் கூடுதல் ரயில் பயண சேவை, ரயில் நிலையங்களில் பாதுகாப்பான சூழல் போன்றவைஇருந்தால் ரயில்களைப் பயன்படுத்துவதற்கு பயணிகளுக்கு தயக்கம் இருக்காது. இப்போதும்கூட ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்துக்கு இடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லை. பல ஊர்களில் ரயில் நிலையங்களுக்கும் பேருந்து நிலையங்களுக்கும் அடிக்கடி சென்று வரும் வண்ணம் நகரப் பேருந்து இணைப்புகூட இல்லை. அதேவேளையில் இந்தியாவின் எல்லா நகரங்களுக்கும் கேரளாவிலிருந்து எக்ஸ்பிரஸ் ரயில்கள் அதிகம் இயக்கப்படுவதை கண்கூடாக காணலாம்.

கடந்த 2009-ல் ரயில்வே அமைச்சகம் மக்களவையில் ‘தொலைநோக்கு பார்வை 2020’ என்ற அறிக்கையை தாக்கல் செய்தது. இந்த அறிக்கையில் தமிழகத்தில் ரயில்வே வளர்ச்சி பற்றி விலாவாரியாக குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு தற்போது நடந்துவரும் திட்டங்களான புதிய ரயில்வழித்தடங்கள் அமைத்தல், மீட்டர்கேஜ் வழித்தடங்களை அகலப் பாதையாக மாற்றம் செய்தல், ரயில் வழித்தடங்களை இருவழிப்பாதையாக மாற்றுதல், மின்மயமாக்கல், முனைய வசதிகளை அதிகரித்தல், தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் கூடுதல் வசதிகள் செய்து விரிவாக்கம் செய்தல், புதிய ரயில் தொழிற்சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அதில் இடம் பெற்றிருந்தன.

எம்பிக்கள் மீது குற்றச்சாட்டுஆனால் இத் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்துவதில் மிகவும் பின்தங்கிய நிலையே காணப்படுகிறது. தமிழகத்திலிருந்து 39 மக்களவை உறுப்பினர்கள், 18 மாநிலங்களவை உறுப்பினர்கள் இருந்தும் ரயில்வே வளர்ச்சி திட்டங்கள் குறிப்பிடத்தக்க அளவு தமிழகத்தில் செயல்படுத்தப்படாததற்குஅவர்கள்ஓங்கி குரல் கொடுக்காததே காரணம் என்பது ரயில் பயணிகள் சங்கங்களின் குற்றச்சாட்டு.

தமிழகத்தில் ரயில்வே வேலை வாய்ப்புகள் அனைத்திலும் வேறு மாநிலத்தவரின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. ரயில்வே வளர்ச்சி திட்டங்களில் தமிழகம் பின்தங்கி இருப்பது எதிர்க் கட்சிகளால் விலாவாரியாக எடுத்துரைக்கப்பட வாய்ப்புள்ளது.

ரயில்வே துறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவு குறித்து தேர்தல்கள் தோறும் பிரச்சார களத்தில் பேசுவதுடன், தேர்தல் அறிக்கைகளிலும் குறிப்பிட்டு விட்டு பின்னர் அவற்றை வசதியாக மறந்துவிடும் கட்சிகள் குறித்தும் வாக்காளர்கள் விழிப்புடன் கவனித்து வருகிறார்கள்.

இம்முறை இளம் வாக்காளர்கள் பலரும் ரயில்வே வளர்ச்சி தொடர்பான கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். எனவே, வரும் மக்களவை தேர்தலில் ரயில்வே வளர்ச்சியில் தமிழகம் பின்தங்கியிருக்கும் விவகாரம் முக்கியமாக எதிரொலிக்கும் என்று தென்மாவட்ட ரயில் பயணிகள் சங்க செயலாளர் பி. எட்வர்ட் ஜெனி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x