Published : 29 Mar 2019 09:27 AM
Last Updated : 29 Mar 2019 09:27 AM

மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு. வெங்கடேசனுக்கு ஆதரவாக மதுரையில் களமிறங்கிய தமுஎகச எழுத்தாளர்கள், கலைஞர்கள்

மதுரை மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளரும், எழுத்தாளருமான சு. வெங்கடேசனுக்கு ஆதரவாக வாக்குகள் சேகரிக்கும் பணியில் தமுஎகச அமைப்பின் எழுத்தாளர்கள், கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் மாநிலம் முழுவதும் இருந்து மதுரையில் அவர்கள் முகாமிட்டு தேர்தல் வேலை பார்த்து வருகின்றனர்.

சு.வெங்கடேசன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவராகவும் உள்ளார். எழுத்தாளரான சு. வெங்கடேசன், கடந்த 25-ம் தேதியன்று கூட்டணிக் கட்சியினருடன் சேர்ந்து வைகை ஆற்றை வணங்கி பிரச்சாரத்தைத் தொடங்கினார். மேலும், மக்களையும், இளைஞர்கள், கல்லூரி மாணவ, மாணவியர், பெண்களின் ஆதரவைப் பெறும் வகையில் ஜனநாயக மாதர் சங்கத்தினர், வாலிபர் சங்கத்தினர் புதுப்புது உத்திகளை பயன்படுத்து கின்றனர்.

இதனையொட்டி வேட்பாளருடன் ‘செல்பி வித் சுவெ’ எனும் பிரச்சாரத்தையும் மேற்கொண்டனர். பிரபல எழுத்தாளரான சு. வெங்க டேசன் வேட்பாளர் ஆகியுள்ளதால் தமுஎகச அமைப்பினர் மற்றும் எழுத்தாளர்கள், கலைஞர்கள் மிகுந்த உற்சாகமாக தேர்தல் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல, வேட்பாளரைப் பற்றிய தவறான தகவல்களும் சமூக வலைத்தளங்களில் எதிர்க்கட்சியினரால் பரப்பப்பட்டு வருகின்றன. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் உண்மைத் தகவல்களை வெளியிட்டு ஆதரவு திரட்டி வருகின்றனர். இதில் மாநிலம் முழுவதும் இருந்து தமுஎகச அமைப்பினர் மற்றும் எழுத்தாளர்கள், கலைஞர்கள் மதுரையில் முகாமிட்டு சுறுசுறுப்பாக தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக தமுஎகச அமைப்பினர் கூறியதாவது: சு. வெங்கடேசன் தகுதியான வேட்பாளர். மற்ற கட்சியினர் பணத்தைத் தண்ணீராகச் செலவழித்து வருகின்றனர். எங்களது வேட்பாளரின் தகுதி, திறமை, செயல்பாடு, மக்களை எளிதில் அணுகும் முறையை தெரிவித்து வாக்குகளை சேகரித்து வருகிறோம்.

எங்களது சங்கம் சார்பில் நிதி வசூலித்து கொடுக்கவும் முடிவெடுத்துள்ளோம். மாநிலம் முழுவதும் இருந்து சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மதுரையில் முகாமிட்டு தேர்தல் வேலை பார்த்து வருகிறோம் என்றனர்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x