Published : 21 Mar 2019 07:08 PM
Last Updated : 21 Mar 2019 07:08 PM

பாஜக வெற்றி பெறும் என்ற கருத்துக் கணிப்பு நாளடைவில் மாறிவிடும்: நீலகிரியில் ஆ.ராசா பிரச்சாரம்

தேர்தல் கருத்துக்கணிப்புகளில் பாஜக வெற்றி பெறும் என்ற கருத்து, நாளடைவில் மாறி விடும். திமுக தலைவர் ஸ்டாலின் கூறியது போல ராகுல் பிரதமராக வருவார் என்று ஆ.ராசா கூறினார்.

நீலகிரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஆ.ராசா நீலகிரி மாவட்டத்தில் பிரச்சாரத்தைத் தொடங்கினார். குன்னூர் வந்த ஆ.ராசாவுக்கு திமுகவினர் வரவேற்பு அளித்தனர்.  பின்னர், உதகை சேரிங்கிராஸ் பகுதியில் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடந்தது.

இதில், ஆ.ராசா பேசியதாவது: 

''பெரும்பலூர் எனது பிறந்த வீடு. நீலகிரி நான் புகுந்த வீடு. நீலகிரி மக்களவைத் தொகுதிக்கு மூன்றாம் முறையாக திமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளேன். நான் வெற்றி பெற்ற போதும், தோல்வியுற்ற போதும், நீலகிரி மாவட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்துள்ளேன். இந்தத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அமோக வெற்றி பெறும். மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமையும்.

தற்போதைய பாஜக ஆட்சியில் வேலைவாய்ப்புமின்மை பெருகியுள்ளது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார். ஆனால், பல லட்சம் மக்கள் வேலை இழந்துள்ளனர். முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு காலத்தில் உள்நாட்டு உற்பத்தி 10 சதவீதமாக இருந்தது. ஆனால், பாஜக ஆட்சியில் உள்நாட்டு உற்பத்தி 6.6 சதவீமாக குறைந்து விட்டது.

மேலும், மத்திய அரசு ஒரே மதம், ஒரே மொழி இருக்க வேண்டும் என எண்ணுகிறது. கலாச்சார தனிப்பட்ட அடையாளத்துக்கு வழியில்லை. இந்துத்துவா கொள்கை புகுத்தும் மக்கள் விரோத ஆட்சி மத்தியில் நடக்கிறது.

தமிழகத்தில் ஊழல் ஆட்சி நடத்தும் அதிமுகயோடு பாஜக கூட்டணி வைத்துள்ளது. தமிழக ஆட்சியைக் குறை சொன்னவர்கள் எல்லாம் தற்போது கூட்டணி அமைத்துள்ளனர். மத்தியிலும், மாநிலத்திலும் இந்த ஆட்சிகள் அகற்றப்பட வேண்டும். அதற்கு மக்கள் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது, ''தேர்தல் கருத்துக்கணிப்புகளில் பாஜக வெற்றி பெறும் என்ற கருத்து, நாளடைவில் மாறி விடும். திமுக தலைவர் ஸ்டாலின் கூறியது போல ராகுல் பிரதமராக வருவார். அவர் பிரதமராக பதியேற்றதும் மதவாதம் இருக்காது. நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள பிரிவு 17 நிலப்பிரச்சினைக்கு புதிய அரசு அமைந்ததும் தீர்வு காணப்படும்'' என்றார்.

பிரச்சாரத்தின் போது உதகை எம்எல்ஏ ஆர்.கணேஷ், திமுக மாவட்டச் செயலாளர் பா.மு.முபாரக், முன்னாள் அமைச்சர் க.ராமசந்திரன் உட்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x