Last Updated : 07 Mar, 2019 08:06 AM

 

Published : 07 Mar 2019 08:06 AM
Last Updated : 07 Mar 2019 08:06 AM

மக்களவைத் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை: ராகுல் காந்தியுடன் தேவகவுடா சந்திப்பு

கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசு நடைபெற்று வருவதால் மக்களவைத் தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவெடுத்தன. தொகுதிப் பங்கீடு குறித்து இரு கட்சிகளின் பேச்சுவார்த்தை குழு கடந்த ஜனவரி முதல் 3 கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியது. தேர்தல் நெருங்கும் நிலையில் எவ்வித முடிவும் எட்டப்படாததால் கடந்த திங்கள்கிழமை மஜதவை சேர்ந்த முதல்வர் குமாரசாமி, தேசியச் செயலாளர் டேனிஷ் அலி ஆகியோர் காங்கிரஸ் தேசியச் செயலாளர் கே.சி.வேணுகோபால், துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர், முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோரை சந்தித்து பேசினர்.

அப்போது மஜத தரப்பில், மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 12 தொகுதிகள் கோரப்பட்டன. அதனை ஏற்க மறுத்த காங்கிரஸ், 6 தொகுதிகளே ஒதுக்க முடியும். 2014-ல் காங்கிரஸ் வெற்றி பெற்ற 10 தொகுதிகளையும் விட்டுத்தர முடியாது என தெரிவித்தது. இதனை குமாரசாமி ஏற்காததால், கூட்டணி பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்தது.

இந்நிலையில் முன்னாள் பிரதமரும் மஜத தேசிய தலைவருமான தேவகவுடா, டெல்லியில் நேற்றுகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின் போது கர்நாடகாவில் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், தொகுதிப் பங்கீடு குறித்தும் ஆலோசித்தனர். தொகுதியின் வெற்றி வாய்ப்பின் அடிப்படையில் தொகுதிகளை பிரித்துக்கொள்ள முடிவெடுத்ததாக தெரிகிறது.

இதுகுறித்து தேவகவுடா கூறுகையில்,‘‘கூட்டணி பேச்சுவார்த்தை அனைத்தும் சுமூகமாக நடக்கிறது. நாங்கள் காங்கிரஸை தவிர, வேறு யாருடனும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை. மஜதவுக்கு 12 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. அதனால் 10 தொகுதிகளை ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்தேன்.

அவர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்துவிட்டு, நேர்மறையான முடிவை சொல்வதாக கூறினார். இதனால் மஜத 9 முதல் 10 தொகுதிகளில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இனிமேல் மஜத பொதுச்செயலாளர் டேனிஷ்அலி காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் வேணுகோபாலை சந்தித்து பேசி, தொகுதிகளை முடிவு செய்வார். மைசூரு, மண்டியா, துமக்கூருவில் மஜத போட்டியிடுவது உறுதி''என்றார்.

9-ம் தேதி ராகுல் காந்தி கர்நாடகாவில் பிரச்சாரத்தை தொடங்குவதால், அதற்கு முன்னதாகதொகுதிப் பங்கீட்டை பேசிமுடிக்க காங்கிரஸ் மேலிடம் முடிவெடுத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x