Published : 19 Mar 2019 08:29 AM
Last Updated : 19 Mar 2019 08:29 AM

சென்னையில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய பெற்றோர் கட்டாயம் வாக்களிக்க பள்ளி மாணவர்கள் வேண்டுகோள்: மாவட்ட தேர்தல் அலுவலகம் புது முயற்சி

சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலகத்தின் நடவடிக்கையால், மக்களவைத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய தங்கள் பெற்றோர் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று பள்ளி மாணவர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

சென்னை மாவட்டத்தில் 18 லட்சத்து 83 ஆயிரம் ஆண் வாக்காளர்கள், 19 லட்சத்து 34 ஆயிரம் பெண் வாக்காளர்கள், 932 இதர வாக்காளர்கள் என மொத்தம் 38 லட்சத்து 19 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலின்போது ஒவ்வொரு முறையும் 80 சதவீதத்துக்கு மேல் வாக்குப்பதிவு நடைபெற்றதில்லை.

கடந்த 2011-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின்போது சென்னை மாவட்டத்தில் 78 சதவீதமும், 2014-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 61 சதவீதமும், 2016-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 73 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

வாக்கு சதவீதத்தை உயர்த்த ஒவ்வொரு தேர்தலின்போதும் விழிப்புணர்வு ஊர்வலங்கள், மனிதச் சங்கிலி, தெரு நாடகங்கள், பலூன்கள் பறக்க விடுதல், கோலமிடுதல் என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், வாக்குப் பதிவு சதவீதம் உயர்வதில்லை.

அதனால் இந்தத் தேர்தலில் பழைய முறைகளைக் கடைபிடிக்காமல் புதிய முறையில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்டத் தேர்தல் அலுவலர் கோ.பிரகாஷ், மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.

சங்கல்ப் பத்ரா திட்டம்

அதனடிப்படையில் மாவட்டத் தேர்தல் அலுவலகம் சார்பில் புது முயற்சியாக பள்ளி மாணவ, மாணவியர் மூலமாக வேண்டுகோள் விடுத்து அவர்களது பெற்றோரை (100 சதவீதம்) வாக்களிக்கச் செய்ய ‘சங்கல்ப் பத்ரா’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:தேர்தல் நடத்தை விதிகள் அமலானதில் இருந்து (100 சதவீதம்) அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து வணிக வளாகங்கள், சாலையோரக் கடைகள், சந்தைகள் உள்ளிட்டவற்றுக்கு வரும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி விளக்கி வருகிறோம்.

இதுகுறித்து வாக்காளர்களுக்குப் பிடித்தமானவர்கள் எடுத்து கூறினால் பலன் கிடைக்கும் என்பதற்காக தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்படி ‘சங்கல்ப் பத்ரா’ என்ற உறுதிமொழி பத்திரத்தை பள்ளி மாணவ, மாணவிகளிடம் வழங்கி வருகிறோம். இதுவரை 2 லட்சம் பேரை உறுதிமொழி பத்திரம் சென்றடைந்துள்ளது.

அதில், “எனக்கு ஜனநாயக கடமையாற்றும் வயது இல்லை. அதனால் அன்பு பெற்றோரே, வரும் மக்களவைத் தேர்தலில் தாங்கள் தவறாது வாக்களிக்க வேண்டுகிறேன்” என்று குழந்தைகள் பெற்றோருக்கு வேண்டுகோள் விடுக்கும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும், ‘இந்தத் தேர்தலில் கட்டாயம் வாக்களிப்பேன்’ என்று குழந்தைகளுக்கு உறுதிமொழி அளித்து, பெற்றோர் கையெழுத்திடும் அம்சங்களும் உறுதிமொழி பத்திரத்தில் இடம்பெற்றுள்ளன. அவ்வாறு கையெழுத்து பெற்ற உறுதிமொழிப் பத்திரங்களை மாணவர்கள், தங்கள் ஆசிரியர்களிடம் வழங்கி வருகின்றனர்.

இதன் மூலம் சென்னையில் 100 சதவீதம் வாக்குப்பதிவு இலக்கு எட்டப்படும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x