Published : 24 Feb 2019 09:19 AM
Last Updated : 24 Feb 2019 09:19 AM

திட்டவட்டமாக கூறிவிட்ட தேமுதிக: ராயப்பேட்டைன்னா 7+1.. தேனாம்பேட்டைன்னா 5+1 - கோயம்பேடு சிக்னலுக்கு காத்திருக்கும் திமுக, அதிமுக

திமுக கூட்டணியில் சேர்வதானால் 5 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கவேண்டும் என்று தேமுதிக திட்டவட்டமாக கூறிவிட்டதாக தெரிகிறது. தொகுதிப் பங்கீடு தொடர்பாக முதல்சுற்று பேச்சுவார்த்தையை முடித்துவிட்ட திமுகவும், காங்கிரஸும் தேமுதிகவுக்காக காத்திருப்பதாக கூறப்படுகிறது. அதிமுகவும் தேமுதிகவுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.

மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸுக்கு புதுச்சேரி உட்பட 10, முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளன. மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுடன் முதல்சுற்று பேச்சுவார்த்தையை திமுக முடித்துள்ளது.

தங்கள் கூட்டணிக்கு பாமகவை கொண்டுவர திமுக, காங்கிரஸ் முயற்சித்து வந்த நிலையில் திடீரென அதிமுக – பாஜக கூட்டணியில் பாமக இணைந்தது. இதனால் திமுகவும், காங்கிரஸும் தற்போது தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டுவர தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளன.

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், கடந்த 21-ம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்துப் பேசினார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 22-ம் தேதி விஜயகாந்தை சந்தித்துப் பேசினார்.

உடல்நலம் குறித்து விசாரிக்கவே சந்தித்ததாக ஸ்டாலின் கூறினாலும், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோருடன், கூட்டணி குறித்து ஸ்டாலின் பேசியதாகவே கூறப்படுகிறது.

இதற்கிடையில், அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7, பாஜகவுக்கு 5, என்.ஆர்.காங்கிரஸுக்கு 1என 13 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டன. அதிமுக 20 தொகுதிகளுக்கு மேல் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளது.

தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் வரை தர அதிமுக தயாராக இருந்தது. ஆனால், பாமக போல 7 தொகுதிகள் மற்றும் 1 மாநிலங்களவை இடத்தை தேமுதிக கேட்டது. இதனால் அதிமுக – தேமுதிக இடையே உடன்பாடு ஏற்படவில்லை.

அதே நேரம், தேமுதிகவை விட்டுவிடக் கூடாது என்ற எண்ணமும் அதிமுக நிர்வாகிகள் மத்தியில் காணப்படுகிறது. தேமுதிக தங்கள்கூட்டணியில் இருக்க வேண்டும்என்பதை கூட்டணிக் கட்சிகளானபாஜக, பாமகவும் விரும்புகின்றன. இதனால், சுதீஷ் உள்ளிட்டோருடன் அதிமுக அமைச்சர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர்.

இதனாலேயே, தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் 22-ம் தேதி அளித்த விருந்தின்போதும், கோரிய தொகுதிகள் தொடர்பாகஎந்த உறுதியையும், அதிமுக அளிக்கவில்லை.

இதற்கிடையில், அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 3 அல்லது 4 தொகுதிகள் ஒதுக்கப்பட இருப்பதாக முதலில் தகவல் வெளியானது.

கும்பகோணத்தில் 22-ம் தேதி நடந்த நடந்த தேமுதிக கூட்டத்தில் பேசிய விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன், ‘‘தேமுதிக பலம் எங்களுக்கு தெரியும். எங்களுக்கு 3, 4 ஒதுக்க நீங்கள் யார்? என் தந்தையின் உடல்நிலை குறித்து பேசியவர்கள் இன்று எங்கள் வீட்டு வாசலில் காத்து நிற்கின்றனர்’’ என்று பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சென்னையில் இன்று நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்தியஅமைச்சருமான பியூஷ் கோயல்வருகிறார். அப்போது, தேமுதிகவுடன் கூட்டணி குறித்த இறுதி முடிவு எட்டப்படலாம் என அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையே, தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் வரை தர திமுககூட்டணியும் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக காங்கிரஸ்தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 10தொகுதிகளில் ஒன்றை விட்டுத்தரவும் ஒப்புக்கொண்டுள்ளது.

ஆனால், ‘குறைந்தது 6 தொகுதிகளாவது வேண்டும். ஒருவேளை 5 தொகுதிகள் என்றால், ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்க வேண்டும்’ என்று தேமுதிக தீர்மானமாக கூறிவிட்டது. தேமுதிகவின் சிக்னலுக்காக ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகமும், தேனாம்பேட்டையில் உள்ளஅறிவாலயமும் காத்திருக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x