Last Updated : 23 Feb, 2019 08:41 AM

 

Published : 23 Feb 2019 08:41 AM
Last Updated : 23 Feb 2019 08:41 AM

உ.பி.யில் பாஜக கூட்டணி கட்சிகளுக்கு வலை: இரு கட்சிகளுடன் காங்கிரஸ் ரகசியப் பேச்சுவார்த்தை

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இரண்டு உறுப்பினர்களை தன்பக்கம் இழுக்க காங்கிரஸ் முயல்வதாகத் தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கட்சி நடத்தும் ரகசியப் பேச்சுவார்த்தையில், மத்திய மருத்துவநலத்துறை இணை அமைச்சரான அனுப்பிரியா பட்டேல் மற்றும் உபி மாநில அமைச்சரான ஓம் பிரகாஷ் ராஜ்பர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

உ.பி.யில் மக்களவைக்கு 80 தொகுதிகள் உள்ளன. கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு 69-ம் அதன் கூட்டணியான அப்னா தளம் கட்சிக்கு இரண்டு தொகுதிகளும் கிடைத்திருந்தன. இதன் மற்றொரு கூட்டணியான சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சிக்கு(எஸ்பிஎஸ்பி) ஒரு தொகுதியும் கிடைக்கவில்லை.

கடந்த 2017-ல் உபி சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் இதே கட்சிகள் கூட்டணியுடன் போட்டியிட்டிருந்தன. இதில் பாஜக 312 தொகுதிகளில் தனி மெஜாரிட்டியும், அப்னா தளம் 9 மற்றும் எஸ்பிஎஸ்பிக்கு 4 தொகுதிகளும் கிடைத்தன. எனினும், மத்திய, மாநில அரசுகளால் தமக்கு போதுமான அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என இரு கட்சிகளுமே பாஜக மீது அதிருப்தியில் உள்ளன. இதற்காக, இரு கட்சித் தலைவரும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் மாயாவதியுடன் பேச்சுவார்த்தையும் நடத்தி இருந்தனர். இவர்களிடம் உடன்படிக்கை ஏற்படாத நிலையில் தற்போது இருகட்சி தலைவர்களும் காங்கிரஸுடன் ரகசிய பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளனர். இவர்களை தன் பக்கம் இழுக்கவும் காங்கிரஸ் முயல்வதாகத் தெரியவந்துள்ளது.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் உ.பி. கங்கிரஸ் நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, ’அனுப்பிரியாவுடனான கூட்டணியால் உ.பி.யில் சுமார் 40 சதவிகிதம் உள்ள குர்மி வாக்குகள் கிடைக்கும். வாக்குகள் இதர பிற்படுத்தப்பட்டவர்களிடம் பெற ராஜ்பருடனான கூட்டணி உதவும். எனவே, ரகசியப் பேச்சுவார்த்தையின் முடிவில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா கூட்டணியை முடிவு செய்வார்’ எனத் தெரிவித்தன.

அப்னா தளத்தில் பிளவு அப்னா தளம் கட்சியில் ஏற்பட்ட பிளவால் புதிதாக உருவானக் கட்சியின் பிரிவுக்கு அனுப்பிரியாவின் தாயான கிருஷ்ணா பட்டேல் அதற்கு தலைமை ஏற்றுள்ளார். தம்மிடம் இருந்து அனுப்பிரியா காங்கிரஸுக்கு தாவினால், கிருஷ்ணாவை தம் கூட்டணியில் சேர்க்க பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா தயாராகி வருகிறார். ராஜ்பருக்கு வேறுசில பதவிகள் அளித்து தம்முடன் தக்க வைக்கவும் அமித்ஷா திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், அகிலேஷும், மாயாவதியும் அமைத்த கூட்டணியின் தொகுதிப் பங்கீடு நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் மாயாவதியின் பகுஜன் சமாஜுக்கு இணையாக இருந்த 38-ல் ஒன்றை சமாஜ்வாதி அளித்ததால் அஜீத் சிங் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கு மூன்று தொகுதிகள் கிடைத்துள்ளன. இதன் பிறகும் அதிருப்தியுடன் இருப்பதாகக் கூறப்படும் அஜீத் சிங்,காங்கிரஸுடனும் ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாகக் கருதப்படுகிறது. எனினும், இதை மறுக்க அஜீத் சிங் நேற்று அறிக்கை விடுத்துள்ளார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x