Published : 28 Feb 2019 08:37 AM
Last Updated : 28 Feb 2019 08:37 AM

புதிய தமிழகம் கட்சிக்காக அதிமுகவிடம் வாதாடும் பாஜக

கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 2 தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற புதிய தமிழகம், 2014 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு மாறியது. 2016 பேரவைத் தேர்தலிலும் திமுக கூட்டணியில் 4 தொகுதிகளில் போட்டியிட்ட புதிய தமிழகத்துக்கு ஓரிடத்திலும் வெற்றி கிடைக்கவில்லை. 2016 பேரவைத் தேர்தலுக்குப் பிறகு பாஜகவுடன் நெருக்கமான புதிய தமிழகம் தலைவர் கே.கிருஷ்ணசாமி, அக்கட்சியின் அறிவிக்கப்படாத கூட்டணி கட்சியின் தலைவர் போலவே செயல்பட்டு வந்தார். பாஜகவுடன் மட்டுமல்ல, ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி போன்ற அமைப்புகளுடனும் அவர் நெருங்கினார்.

கடந்த ஜனவரி 27-ம் தேதி மதுரையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, எஸ்.சி. பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்ற தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினரின் கோரிக்கையை நிறைவேற்றுவது பரிசீலிக்கப்படும் என்றார்.

இதனிடையே இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதாக இருந்தால் கிருஷ்ணசாமிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்படும் என அதிமுக கூறியுள்ளது. இதனை ஏற்காத கிருஷ்ணசாமி,  "தனிச் சின்னத்தில் மட்டுமே போட்டியிடுவேன்" என கூறிவிட்டார். இதற்கு அதிமுக சம்மதிக்காததால் கூட்டணி இழுபறி நீடிக்கிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, பிரதமர் அறிவித்தும் எஸ்.சி. பட்டியலில் இருந்து தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற பாஜக, அதிமுக முன்வராதது வருத்தம் அளிக்கிறது. எங்கள் கோரிக்கையை ஏற்கும் பிற கட்சிகளுடன் கூட்டணி குறித்து ஆலோசிக்கிறோம் என்றார்.

அதிமுக கூட்டணியில் புதிய தமிழகத்துக்கு தென்காசி தொகுதியை பெற்றுத்தந்துவிட வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. இதற்காக அதிமுகவிடம் பாஜக தலைவர்கள் தொடர்ந்து வாதாடி வருவதாகவும் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x