Last Updated : 28 Feb, 2019 08:55 AM

 

Published : 28 Feb 2019 08:55 AM
Last Updated : 28 Feb 2019 08:55 AM

மாநிலங்களவையில் எந்த வேலையும் நடக்காதது ஏன்?; எம்.பி.க்களிடம் கேள்வி கேளுங்கள்- இளைஞர்களை கேட்டுக்கொண்ட பிரதமர் மோடி

‘‘மாநிலங்களவையில் அலுவல்கள் நடைபெறாததற்கு என்ன காரணம் என்று, உங்கள் பகுதி எம்.பி.க்களை அழைத்து கேளுங்கள்’’ என்று இளைஞர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.

‘தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழா - 2019’, டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர். அவர்கள் மத்தியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசியதாவது:கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலின் போது, மக்கள் அமோக ஆதரவளித்து தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்க வழிவகுத்தனர். அதற்கேற்ப நாட்டை வளர்ச்சிப் பாதைக்குகொண்டு செல்வதற்கு நடவடிக்கைஎடுத்தோம். ஆனால், மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள்அதிக எண்ணிக்கையில் இருப்பதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு, மத்திய அரசின் திட்டங்களை தடை செய்தனர்.

தற்போதுள்ள 16-வது மக்களவையில் பாஜக.வுக்கு தனிப்பெரும்பான்மை உள்ளது. அதனால், மக்களவை நடவடிக்கைகள் 85 சதவீதம் நடந்தன. இது கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் இருந்ததை விட 20 சதவீதம் அதிகம்.

அத்துடன் மக்களவையில் 205 மசோதாக்களை நிறைவேற்றி இருக்கிறோம்.

ஆனால், மாநிலங்களவையில் எந்த அலுவலும் நடைபெற விடாமல் எதிர்க்கட்சியினர் தடுத்தனர். நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, மாநிலங்களவை 8 சதவீத அளவுக்கே செயல்பட்டுள்ளது. மத்தியஅரசு எடுக்கும் எந்த வளர்ச்சித் திட்டத்தையும், சட்டத்தையும் தடுத்து நிறுத்த மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஒன்றாக கைகோத்துக் கொள்கின்றனர்.

இந்த இளைஞர் நாடாளுமன்ற விழாமுடிந்த பிறகு, நீங்கள் உங்கள் சொந்தஊருக்குச் செல்வீர்கள். அங்கு இதுபோல் விழாக்களுக்கு ஏற்பாடு செய்து, உங்கள் மாநிலத்தின் மாநிலங்களவை எம்.பி.க்களை சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள அழைப்பு விடுங்கள். அதில் பங்கேற்கும் மாநிலங்களவை எம்.பி.க்களிடம், மாநிலங்களவையில் ஏன் எந்த அலுவலும் நடக்கவில்லை என்று கேள்வி எழுப்புங்கள். அப்படி கேள்வி எழுப்பினால், நாடு முழுவதும் அது பரவும்.

டெல்லியில் இந்தியா கேட் அருகில் தேசிய போர் நினைவுச் சின்னத்தை நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளேன். அதேபோல் தேசிய போலீஸ் நினைவிடத்தையும் டெல்லியில் திறந்துவைத்துள்ளேன். இந்த 2 இடங்களையும் இளைஞர்கள் பார்வையிட வேண்டும். அப்போதுதான், இந்த நாட்டை உருவாக்குவதற்கு உங்களுக்குள் ஊக்கச் சக்தி பிறக்கும், உற்சாகம் ஏற்படும்.

இளைஞர்கள் நாடாளுமன்ற விழா குறித்து உங்கள் கருத்துகளையும் தெரிவிக்க வேண்டுகிறேன். எதிர்காலத்தில் இந்த விழாவை மேலும் சிறப்பாக செய்வதற்கு அது வழிவகுக்கும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். பின்னர் இளைஞர்கள் கேட்ட கேள்விகளுக்கு மோடி பதில் அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x