Published : 18 Apr 2014 10:57 AM
Last Updated : 18 Apr 2014 10:57 AM

இல.கணேசனை ஆதரித்து நமோ படகு பேரணி: பாஜக மீனவரணி நடத்தியது

தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் இல.கணேசனை ஆதரித்து சென்னையில் நமோ படகு பேரணி நடத்தப்பட்டது.

வியாழக்கிழமை காலை 11 மணியளவில், நயினார் குப்பத்தில் நமோ படகு பேரணியை இல.கணேசன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததும் மீன்வளத் துறைக்கு நிச்சயமாக தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டு மீனவர் நலன் பாதுகாக்கப்படும். மீனவக் குழந்தைகளுக்கு தற்போது கல்விக் கடன் வழங்க மறுப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையை மாற்றி அவர்களுக்கு கல்விக் கடன் கிடைக்கவும் படகுகள் கட்டுவதற்கு கடன் வழங்கவும் கட்டாயம் நடவடிக்கை எடுப்பேன்.

கடலுக்குப் போகும் மீனவர்கள் காணாமல் போய் விட்டால் ஏழு வருடங்கள் கழித்தே அவர்கள் இறந்து விட்டதாக உறுதி செய்யப்பட்டு, குடும்பத்துக்கு 2 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படுகிறது.

இனிமேல் அப்படி இல்லாமல், மீனவர் ஒருவர் காணாமல் போய்விட்டால் அவரது குடும்ப வாரிசு பெயரில் வங்கியில் 2 லட்ச ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் வட்டி அந்தக் குடும்பத்துக்கு வழங்கப்படவும் ஏழாண்டுகள் கழித்து அசலையும் வழங்கவும் நடவடிக்கை எடுப்பேன். மீனவர் களை கடல்வாழ் பழங்குடியின மக்களாக அறிவிக்கவும் மத்திய அரசை வலியுறுத்துவேன்’’ இவ்வாறு இல.கணேசன் பேசினார்.

படகு பேரணியை தொடங்கி வைத்து ஒரு மணி நேரம் படகில் இருந்தார் இல.கணேசன். பேரணியில் சுமார் 50 படகுகள் அணிவகுத்தன.

நயினார் குப்பத்தில் தொடங் கிய பேரணி 25 கிலோமீட்டர் தூரம் கடந்து கலங்கரை விளக்கம் அருகே நொச்சிக்குப்பத்தில் முடிவுக்கு வந்தது.

நமோ படகு பேரணிக்கான ஏற்பாட்டை பாஜக மீனவரணி யினர் செய்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x