Published : 16 Apr 2014 01:08 PM
Last Updated : 16 Apr 2014 01:08 PM

மதத்தின் பெயரால் தேசத்தை பிரிக்க முயற்சி செய்கின்றனர்: கன்னியாகுமரி பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் சோனியா பேச்சு

பாஜக தனி நபர் கையில் சிக்கி இருக்கிறது. தனி நபர் கையில் ஆட்சி அதிகாரம் செல்லக் கூடாது என அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசினார்.

கன்னியாகுமரியில் புதன் கிழமை நடைபெற்ற காங்கிரஸ் பிரச்சாரக் கூட்டத்தில், அவர் பேசியதாவது: ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எத்தனையோ வளர்ச்சித் திட்டங் களை செயல்படுத்தி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 40 கோடி மக்களை வறுமை கோட்டுக்கு கீழே இருந்து மீட்டுள்ளோம். தாழ்த்தப் பட்ட, மலைவாழ் மக்கள், சிறுபான்மையின மக்கள், பெண்கள், குழந்தைகள் முன்னேற முயற்சி எடுக்கப்பட்டு வெற்றி பெற்றுள்ளோம். மகளிர் குழுக்களுக்கு கடனாக ரூ. 77,000 கோடி, மாணவர்களுக்கு கல்விக் கடனாக ரூ. 55,000 கோடி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர் நலன்

தமிழகத்தில் சில அரசியல் கட்சிகள், ‘இலங்கைத் தமிழ் சகோதரர்களுக்கு காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை’ என்கின் றனர். இலங்கைத் தமிழருக்கு காங்கிரஸ் கட்சியை விட நன்மை செய்தவர்கள் இந்தியாவில் யார் இருக்கிறார்கள்? இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக சாலை, புதிய பள்ளிக்கூடங்கள், அரசியல் தீர்வு ஆகியவற்றை பெற காங்கிரஸ் அரசுதான் வழிவகை செய்துள்ளது.

அதிமுக மீது புகார்

ஜனவரி 2-ம் தேதி இலங்கை, தமிழக மீனவர்களை சந்திக்க வைத்த பெருமை காங்கிரஸ் கட்சிக்கே சாரும். ஆனால், அதற்கு இடம் அனுமதி கொடுப்பதற்கு அதிமுக அரசு காலதாமதம் செய்தது.

ஒருமைப்பாடுக்கு சவால்

மதவாதம், அரசியல் அதிகாரம், பெரும் பண பலம் ஆகியவற்றைக் கொண்டு, இந்திய ஒருமைப்பாடு தத்துவத்துக்கே சவால் விடுக்கின்றனர். மதத்தின் பெயரால் தேசத்தை பிரிக்க முயற்சி செய்கின்றனர். அதன் மூலம் சமூக அமைதி சிதையும். சமூக அமைதி சிதைந்தால் நாட்டில் முன்னேற்றமும், வளர்ச்சியும் வருமா?

தனி நபர் கையில்…

பாஜக தனி நபர் கையில் சிக்கி இருக்கிறது. ‘இந்தியாவில் உள்ள எந்த பிரச்சினையையும் தன்னால் தீர்க்க முடியும்’ என்று அவர் சொல்லி வருகிறார். அவரிடம் நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள். தனி நபர் கையில் அதிகாரம் செல்லக் கூடாது.

வாக்குறுதி

காங்கிரஸ் வெற்றி பெற்றால், அனைவருக்கும் ஆரோக்கிய வாழ்வு, வீடு, மாற்றுத் திறனா ளிகள், முதியோருக்கு ஓய்வூதியம், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஆகியவற்றை பெறும் உரிமை வழங்குவோம். கடந்த காலத்தில் தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம். இவற்றையும் நிறைவேற்றுவோம்.

சென்னை முதல் கன்னியாகுமரி வரை இரட்டை ரயில் பாதை, மீனவர்களுக்கு பாதுகாப்பு, கன்னியாகுமரியில் விமான நிலையம் மற்றும் மத்திய பல்கலைக்கழகம் அமைத்தல் ஆகியவை நிறைவேற்றப்படும். இளமையான, வலிமையான அரசு அமைய காங்கிரஸுக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு சோனியா பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x