அதிமுக வெற்றி மூலம் மதவாத சக்திகளுக்கு மரண அடி: சீமான்

அதிமுக வெற்றி மூலம் மதவாத சக்திகளுக்கு மரண அடி: சீமான்
Updated on
1 min read

தமிழகத்தில் அ.தி.மு.க. வெற்றி மூலம் மதவாத சக்திகளுக்கு மரண அடி கொடுத்திருப்பதாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கு மகத்தான வெற்றியைப் பெற்றுக் கொடுத்ததன் மூலமாக மதவாத சக்திகளுக்கு மரண அடி கொடுத்திருக்கிறார்கள் தமிழக மக்கள்.

ஈழத்துயரங்களுக்குத் தீர்வு கேட்டும் தனித் தமிழீழக் கோரிக்கையை ஆதரித்தும் மூவர் தூக்கு விவகாரத்தில் அதிரடியான நடவடிக்கைகளை எடுத்தும் தமிழர் நலன் போற்றும் முதல்வராக திகழ்ந்த ஜெயலலிதா அவர்களுக்கு அபரிவிதமான வெற்றியை ஈட்டிக் கொடுத்து வரலாற்றுப் புரட்சியை நிகழ்த்தியிருக்கிறார்கள் தமிழக மக்கள்.

தமிழகத்தின் தேவைகளை நாடாளுமன்றத்தில் அழுத்தமாக முழங்கவும் தமிழக உரிமைகளைப் பாதுகாக்க உரியபடி போராடவும் அ.தி.மு.க.வே சரியான கட்சி என்பதை மக்கள் திட்டவட்டமாக தீர்மானித்திருக்கிறார்கள். மூன்றாவது அணி என்கிற பெயரில் பரப்பப்பட்ட பொய்ப் பிரசாரங்களுக்கு இடம் கொடுக்காமல் இனமானப் பிள்ளைகளாக மதவாத சக்திகளை வீழ்த்திக் காட்டி இருக்கிறார்கள் தமிழக மக்கள்.

ஈழக் கோரங்களை நிகழ்த்திய காங்கிரஸ் கட்சியையும் அதற்குத் துணை போன தி.மு.க.வையும் வேரோடு வீழ்த்திக் காட்டி நம் இனம் பட்ட ரணத்தின் வலியை தமிழக மக்கள் தக்கபடி திருப்பிக் கொடுத்திருக்கிறார்கள். பாரதீய ஜனதா கூட்டணி அகில இந்திய அளவில் வென்றாலும், தமிழகத்தில் அந்தக் கட்சி தளிர்விட முடியாத நிலையை வாக்காள பெருமக்கள் உருவாக்கிக் காட்டியிருக்கிறார்கள்.

பல கட்சிகளை ஒருங்கிணைத்து பிரமாண்ட கூட்டணிபோல் காட்டியும் மோடி அலை என மூச்சடங்கப் பேசியும் தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சியால் எந்தவிதப் பலனையும் பெற முடியாமல் போய்விட்டது. இந்தியா முழுக்க எழுந்த மோடி அலை தமிழகத்தில் மட்டும் ஊதித்தள்ளப்பட்டதற்கு தமிழக மக்களின் அரசியல் தெளிவும் அறிவுமே காரணம். எந்தக் கட்சியையும் கூட்டணிக்கு அழைக்காமல் மக்கள் மீது நம்பிக்கை வைத்து தேர்தலைச் சந்தித்த தமிழக முதல்வருக்கு தமிழக மக்கள் நல்ல நம்பிக்கையைப் பரிசளித்திருக்கிறார்கள்". இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in