

வாரணாசியில் பொது இடத்தில் விவாதத்துக்கு தயாரா என பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் ட்விட்டர் சமூக வலைதளம் வாயிலாக சவால் விடுத்துள்ளார்.
"மோடியை பொது மேடையில் வெளிப்படையான விவாதத்துக்கு வருமாறு அழைக்கிறேன். காசி நகர மக்கள் எங்கள் இருவரிடமும் நேருக்கு நேர் கேள்விகள எழுப்பட்டும். இடம், நேரம் மோடியின் விருப்பம்" இவ்வாறு கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
கங்கையில் பூஜை செய்ய தேர்தல் ஆணையத்திடம் மோடி அனுமதி கோரியதையும் கேஜ்ரிவால் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து ட்விட்டரில் அவர் பதிவு செய்ததாவது: "கங்கையில் பூஜை செய்வது மத ரீதியான சடங்கு அது அரசியல் நிகழ்வு அல்ல. இதற்கும் தேர்தல் ஆணைய அனுமதிக்கும் என்ன தொடர்பு. இப்படி எல்லாம் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோருவதன் மூலம் மோடி தனது சிறு செயல்களிலும் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்". இவ்வாறு கேஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.