Published : 13 May 2014 09:08 AM
Last Updated : 13 May 2014 09:08 AM

உள்ளாட்சித் தேர்தல்: தெலங்கானாவில் காங்கிரஸ், சீமாந்திராவில் தெலுங்கு தேசம் அமோகம்

ஆந்திரத்தில் நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் திங்கள்கிழமை எண்ணப்பட்டு மாலையில் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் தெலங்கானாவில் காங்கிரஸும் சீமாந்திராவில் தெலுங்கு தேசமும் அதிக நகராட்சிகளைக் கைப்பற்றின. சீமாந்திராவில் ஒரு நகராட்சியில் கூட காங்கிரஸ் வெற்றிபெற வில்லை.

ஆந்திர மாநிலத்தில் கடந்த மார்ச் 30-ம் தேதி 145 நகராட்சிகள், 10 மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதன் முடிவுகளை உடனடியாக வெளியிட்டால் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என சில வேட்பாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் முடிவுகளை வெளியிடுமாறு உத்தரவு பிறப்பித்தது. இதன் காரணமாக, 43 நாட்களுக்குப் பிறகு திங்கள்கிழமை காலை 8 மணிக்கு மாநிலம் முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

தெலங்கானாவில்..

தெலங்கானாவில் 63 நகராட்சிகள், 3 மாநகராட்சிகள், சீமாந்திராவில் 92 நகராட்சிகள் 7 மாநகராட்சிகளுக்கான வாக்குகள் 155 மையங்களில் எண்ணப்பட்டன. இந்தப் பணியில் 8000 ஊழியர்கள் ஈடுபட்டனர். வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டது.

தெலங்கானாவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சிகளுக்கிடையே பலத்த போட்டி நிலவியது. இதில் காங்கிரஸ் 27 நகராட்சிகள் ஒரு மாநகராட்சியையும் தெலங் கானா ராஷ்டிர சமிதி கட்சி 11 நகராட்சிகள், ஒரு மாநகராட்சி யையும் தெலுங்கு தேசம் 6 நகராட்சிகளையும் கைப்பற்றின.

சீமாந்திராவில்..

சீமாந்திராவில் தொடக்கம் முதலே தெலுங்கு தேசம் ஆதிக்கம் செலுத்தியது. இங்கு 65 நகராட்சிகளையும் 5 மாநகராட்சி களையும் தெலுங்கு தேசம் கைப்பற்றியது. அடுத்தபடியாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 22 நகராட்சிகளையும் 2 மாநகராட்சி யையும் பிடித்தது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு நகராட்சி கூட கிடைக்கவில்லை.

144 தடை உத்தரவு

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப் பட்டதால் நகர்ப்புறங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதை மீறி, வெற்றி பெற்ற கட்சியினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் ஊர்வலம் நடத்தியும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

நகராட்சி முடிவுகள், சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுடன் ஒத்துப்போகுமா, முடிவுகள் மாறுமா என அறிய மே 16-ம் தேதி வரை காத்திருக்க வேண்டும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x