Published : 15 May 2014 09:28 AM
Last Updated : 15 May 2014 09:28 AM

பாஜகவுடன் கூட்டணியா? - தேசியவாத காங்கிரஸ் மறுப்பு

மத்தியில் புதிய அரசு அமையவுள்ள நிலையில் பாஜகவுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சி நெருக்கம் காட்டி ஆதாயம் தேட முயற்சிப்பதாக வெளியான செய்தியை அந்த கட்சி மறுத்துள்ளது.

இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் டி.பி.திரிபாதி புதன்கிழமை கூறியதாவது:

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் கட்சி அங்கம் வகிக்கிறது. அந்த அணியில்தான் நாங்கள் தொடர்ந்து இருப்போம். ஒருவேளை பாஜக தலைவர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தால் எதிர்க்கட்சி வரிசையில் தேசியவாத காங்கிரஸ் அமரும்.

பாஜகவுடன் தேசியவாத காங்கிரஸ் எந்த நெருக்கம் வைக்கவில்லை. இதுதொடர்பாக வரும் செய்திகள் தவறா னவை.

இவ்வாறு திரிபாதி கூறினார்.

இந்தியா தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் செல்ல மக்கள் தீர்ப்புக்கு மதிப்பு தரப்படவேண்டும். நிலையான அரசு அமைய வேண்டும் என கட்சியின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான பிரபுல் படேல் செவ்வாய்க்கிழமை கருத்து தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து இந்த விளக்கத்தை திரிபாதி கொடுத்துள்ளார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்து பெரிய கட்சியாக இருப்பது தேசியவாத காங்கிரஸ் கட்சி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x