

மூன்றாவது அணி வெறும் கானல் நீர் போன்றது, மத்தியில் மாற்றாக மாநிலக் கட்சிகள் ஆட்சி அமைப்பது என்பது ஒரு போதும் நடைபெறாது என பாஜக மூத்த தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 300 இடங்களை கைப்பற்றி வலுவான அரசை அமைக்கும் எனவும் வெங்கய்யா தெரிவித்தார்.
தேசத்திற்கு பாஜக போன்ற ஒரு தேசிய கட்சியால் தான் வலுவான, நிலையான அரசை அமைத்துக் கொடுக்க முடியும் என கூறிய அவர் கடந்த 10 ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், நாடு நிர்வாக முடக்கத்தாலும், வேலைவாய்ப்பின்மை பிரச்சினையாலும், பெண்களுக்கு எதிரான வன்முறையாலும், பொருளாதார மந்த நிலையாலும், விவசாயிகள் தற்கொலைகளாலும் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறினார்.
ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சி பாஜக கூட்டணி அமைத்துள்ளது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மேலும் வலு சேர்த்துள்ளது என அவர் தெரிவித்தார். இருப்பினும், தேர்தலுக்குப் பின்னர் புதிதாக பாஜக கூட்டணி ஏதும் அமைக்க வாய்ப்பில்லை என்றார்.