Published : 07 Apr 2014 09:30 AM
Last Updated : 07 Apr 2014 09:30 AM

வகுப்புவாத சக்திகளுக்கு ஊக்கம் தருவதா?- காங்கிரஸ் மீது சீதாராம் யெச்சூரி தாக்கு

வகுப்புவாத சக்திகளின் வளர்ச்சிக்கு ஊக்கம் தருவதாக காங்கிரஸின் கொள்கைகள் உள்ளன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சீதாராம் யெச்சூரி குற்றம் சாட்டியுள்ளார்.

கோழிக்கோட்டில் ஞாயிற்றுக் கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட நிருபர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது: வகுப்புவாத அச்சுறுத்தலுக்கு முடிவுகட்டுவதற்கு, இடதுசாரி ஜனநாயக மதச்சார்பற்ற மாற்று அணியை ஏற்படுத்துவதே இப்போதைய தேவை.

வகுப்புவாத சக்திகளை எதிர்க்க காங்கிரஸுக்கு ஆதரவு தருவது எதிர்பார்க்கும் பலனை தராது. காங்கிரஸின் கொள்கைகளே வகுப்புவாத சக்திகளின் வளர்ச்சிக்கு ஊக்கம் தருவதாக உள்ளன. மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியை வகுப்புவாத சக்திகள் தங்களுக்கு ஆதாயமாகப் பயன்படுத்துகின்றன. இந்த அச்சுறுத்தலில் இருந்து நாட்டை காப்பாற்ற இடதுசாரி ஜனநாயக மதச்சார்பற்ற மாற்று அணியை உருவாக்குவது அவசரத் தேவை.

இப்போது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ள டெல்லி இமாம் சையது அகமது புகாரி, 2004ல் நடந்த தேர்தலில் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தவர்தான். வாஜ்பாய்க்கு அவர் ஆதரவு அறிவித்த போதும் தேர்தலில் பாஜக தோல்வி கண்டது. எனவே காங்கிரஸ் விழிப்புடன் இருப்பது நல்லது.

இதுவரையிலும் தேர்தல் அறிக்கையையே வெளியிடவில்லை பாஜக. இதை என்னவென்பது என்றார் யெச்சூரி. மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளது பற்றி கேட்டதற்கு டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கும் என யாராவது கணித்தார்களா? 2004ல் மன்மோகன்தான் பிரதமர் என்று யாரும் கணிக்கவில்லையே, 10 ஆண்டுகளாக பிரதமராக மன்மோகன் நீடிக்கிறாரே என்றார் யெச்சூரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x