

சோழர்களின் தலைநகராகத் தஞ்சை விளங்கியபோதிலும், அவர்களின் சமயத் தலைநகராக விளங்கியது சிதம்பரமே. சோழர்களின் அரசியல் நடவடிக்கைகளுக்கு முக்கியத் தலமாகவும் சிதம்பரம் இருந்தது. கி.பி 907 முதல் 955 வரை சோழ மன்னராக இருந்த பராந்தகச் சோழன், நடராஜர் கோயிலுக்குப் பொற்கூரை வேய்ந்ததுடன், வீரநாராயணபுரம் எனும் வீராணம் ஏரியை அமைத்தார். அதுவே இன்று சென்னை மக்களின் தாகம் தீர்க்கிறது. பண்டைய தமிழர் வரலாற்றுக்கும் இன்றைக்கு நாம் அனுபவித்துவரும் தேவைகளுக்குமான நேரடித் தொடர்புக்குச் சிறந்த உதாரணம் இது.