Last Updated : 09 Apr, 2014 01:39 PM

 

Published : 09 Apr 2014 01:39 PM
Last Updated : 09 Apr 2014 01:39 PM

டெல்லி: மும்முனை போட்டியில் 3 மத்திய அமைச்சர்கள்

மக்களவைத் தேர்தலுக்காக டெல்லியில் இருக்கும் ஏழு தொகுதியில் பிரச்சாரம் செவ்வாய்கிழமை மாலையுடன் ஓய்ந்தது. இங்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் மூன்று மத்திய அமைச்சர்கள் மும்முனை போட்டியில் சிக்கியுள்ளனர்.

கடந்த தேர்தலில் பாரதிய ஜனதாவுடனான நேரடிப்போட்டியில் அனைத்து ஏழு தொகுதிகளையும் வென்ற காங்கிரசிற்கு இந்த முறை ஆம் ஆத்மி கட்சியும் போட்டியில் இணைந்ததால் மும்முனை போட்டியாக மாறியுள்ளது.

இதில், மூன்றாவது முறையாக அதே தொகுதிகளில் போட்டியிடும் மத்திய சட்டத்துறை அமைச்சரான கபில் சிபல், மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறையின் கிருஷ்ணா தீர்த் மற்றும் முன்னாள் அமைச்சரான அஜய் மாக்கன் ஆகியோரும் தனித்திருக்கவில்லை.

டெல்லியின் சாந்தினி சவுக்கில் போட்டியிடும் கபில்சிபல், கடந்த 2004 தேர்தலில் பாஜகவில் போட்டியிட்ட தொலைக்காட்சி தொடரின் நடிகையான ஸ்மிருதி ராணியை வென்றார். அதன் பிறகு, பாஜக சார்பில் அதன் மாநில தலைவரான விஜய்கோயலை வென்றார். இந்தமுறை அவருக்கு ஆம் ஆத்மி சார்பில் முன்னாள் பத்திரிகையாளரான அசுதோஷும் கடும் போட்டியாளராக இருக்கிறார்.

புது டெல்லி தொகுதியில் போட்டியிடும் அஜய் மாக்கன், கடந்த தேர்தலில், பாஜகவில் மத்திய அமைச்சரான ஜெக்மோகனை 2004-ல் முதன்முறையாகவும், இரண்டாவதாக விஜய் கோயலையும் தோற்கடித்தார். இந்தமுறை அவரை பாஜகவிற்காக எதிர்க்கும் அதன் தேசிய தொடர்பாளரான மீனாட்சி லேக்கி, அப்பகுதியில் மிகவும் பிரபலமானவர். ஆம் ஆத்மி சார்பில் நரேந்தர் மோடியை, இளம்பெண்ணின் கைப்பேசி ஒட்டு கேட்கும் வழக்கில் சிக்க வைத்த பத்திரிகையாளர் ஆஷிஷ் கெஹதான் மூன்றாவது முனை போட்டியாளராக இருக்கிறார்.

தனி தொகுதியான வடமேற்கு டெல்லியில் கிருஷ்னா தீர்த், அமித் ஆர்யாவையும், அதற்கு முன்பாக மீரா காவரியாவையும் பாஜக சார்பில் தோற்கடித்திருந்தார். இவரை பாஜகவில் தலீத் சமூகத்தின் தலைவரான உதித்ராஜ் எதிர்க்கிறார். இவர், தாம் தனியாக நடத்தி வந்த கட்சியை கலைத்து விட்டு பாஜகவில் இணைந்தவர்.

இங்கு, ஆம் ஆத்மி சார்பில் மற்றொரு முன்னாள் பத்திரிகையாளரான ராக்கி பித்லான் போட்டியில் உள்ளார். இவர், டெல்லியில் 49 நாள் ஆட்சி செய்த அக்கட்சியின் அர்விந்த் கேஜ்ரிவாலின் அமைச்சரவையில் உறுப்பினராக இருந்தவர்.

இவர்களுடன், மற்ற தொகுதிகளில் நம் தேசத் தந்தையில் ஆம் ஆத்மி சார்பில் கொள்ளுபேரன் ராஜ்மோகன் காந்தி, பாஜகவில் போஜ்புரி நடிகரான மனோஜ் திவாரி ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

கடந்த டிசம்பரில் நடந்த டெல்லி சட்டசபை தேர்தலில் முதலாவது எண்ணிக்கையில் வந்து ஆட்சி அமைக்க முடியாமல் இருந்தது பாஜக. இதனால், காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்த ஆம் ஆத்மி கட்சிக்கு இருக்கும் செல்வாக்கு, டெல்லியில் மூன்றாவது முனைப்போட்டியாக மாறி இருப்பதன் காரணம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x