Published : 08 Apr 2014 12:00 AM
Last Updated : 08 Apr 2014 12:00 AM
பொது சிவில் சட்டத்தை ஆதரித்து வாக்களித்த திமுகவுடன் கூட்டணி வைக்கலாமா என்று முஸ்லிம் இயக்கங்களுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மதிமுக வேட்பாளர் மாசிலா மணியை ஆதரித்து கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ ஞாயிற்றுக்கிழமை பிரச்சாரம் செய்தார். அன்றிரவு ஸ்ரீபெரும் புதூரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
கடந்த 2002-ம் ஆண்டு மக்களவையில் பாஜக உறுப்பினர் கொண்டு வந்த பொது சிவில் சட்ட மசோதாவை அறிமுக நிலையிலேயே நாங்கள் எதிர்த்தோம். பனத்வாலாவும் எதிர்த்தார்.
2009ல் அமைச்சராக இருந்த பிரமோத் மகாஜன், மசோதாவை எதிர்க்காமல் புறக்கணிக்கும்படி என்னிடம் கேட்டுக் கொண்டார். அதை மறுத்து, மசோதாவை எதிர்த்து வாக்களித்தேன்.
ஆனால், அப்போது அந்தக் கூட்டணியில் இருந்த திமுக, மசோதாவை ஆதரித்து வாக்களித்தது. பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த திமுகவுடன் முஸ்லிம் இயக்கங்கள் கூட்டணி வைக்கலாமா?
தமிழகத்தில் திமுக மீதுள்ள வெறுப்பில் அதிமுகவும், அதிமுக மீதுள்ள வெறுப்பில் திமுகவும் மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன. இரண்டுமே ஊழல் கட்சிகள்தான்.
இந்த நிலையை மாற்று கின்ற அணியாக தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைந்து மக்களிடம் வரவேற்பையும் பெற்றிருக்கிறது.
இந்தத் தொகுதியில் டாக்டர் மாசிலாமணியை நான்தான் வற்புறுத்தி வேட்பாளராக நிறுத்தியிருக்கிறேன். அவரை வெற்றி பெறச் செய்யுங்கள்.
இவ்வாறு வைகோ பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT