Published : 29 Apr 2014 12:00 AM
Last Updated : 29 Apr 2014 12:00 AM

மோடிக்கு எதிராக காங்கிரஸ் சி.டி. வெளியீடு

ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக ஹவாலா முறைகேட்டில் தொடர்புடைய அப்ரோஸ் பாட்டாவுடன், நரேந்திர மோடி இருக்கும் படங்கள் அடங்கிய ‘சி.டி’-யை காங்கிரஸ் திங்கள்கிழமை வெளியிட்டது.

இதுபற்றிய சுதந்திர விசாரணைக்கு நரேந்திர மோடி தயாரா என்றும் காங்கிரஸ் கேள்வியெழுப்பியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜிவாலா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அகமதாபாத் மற்றும் சூரத் அமலாக்கப்பிரிவினரால், ரூ.1,000 கோடிக்கும் அதிகமான அளவு ஹவாலா முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்ட அப்ரோஸ் பாட்டா, ஏராளமான அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகளில் நரேந்திரமோடியுடன் பங்கேற்றுள்ளார். இருவருக்கும் உள்ள உண்மையான உறவு என்ன? அவருக்கு மோடி ஏன் பாதுகாப்பளிக்க வேண்டும். இதுதொடர்பாக மறைப்பதற்கு எதுவுமில்லை என்றால் குஜராத்துக்கு வெளியே சுதந்திரமான விசாரணைக்கு மோடி தயாரா? என அவர் கேள்வியெழுப்பினார்.

சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு டிஎல்எப் நில முறைகேட்டில் உள்ள தொடர்பு குறித்து பாஜக சி.டி. வெளியிட்டிருந்தது. அதற்குப் பதிலடியாக காங்கிரஸ் மோடிக்கு எதிரான சி.டி.-யை வெளியிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x