Published : 11 Apr 2014 01:03 PM
Last Updated : 11 Apr 2014 01:03 PM

திரிணமூல் பேரணியை வீடியோ எடுத்த தேர்தல் பணியாளர்களுக்கு அடி, உதை: விளக்கம் கேட்கிறது தேர்தல் ஆணையம்

மேற்கு வங்கத்தில் ஆளும் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் நேற்று நடத்திய பைக் பேரணியை தேர்தல் பணியாளர்கள் வீடியோ எடுத்தனர்.

இதையடுத்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் அவர்களை அடித்து உதைத்துள்ளனர்.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் விளக்க அறிக்கை கேட்டுள்ள தேர்தல் ஆணையம், இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு கடும் நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தின் போது பைக் பேரணி நடத்த கூடாது என்று தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மால்டா மாவட்டம் மானிக்சாக் பகுதியில் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் பைக் பேரணி நடத்தியுள்ளனர். அப்போது தேர்தல் ஆணையத்தைச் சேர்ந்த 4 அலுவலர்கள் அதனை வீடியோ எடுத்துள்ளனர்.

இதையடுத்து பேரணியில் சென்றவர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அதில் சிலர் வீடியோ எடுத்தவர்களில் இரு வரை அடித்து உதைத்தனர் என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை என்று உள்ளூர் போலீஸார் கூறியுள்ளனர்.

டெல்லியில் இது தொடர்பாக கூடி ஆலோசித்த தேர்தல் ஆணைய அதிகாரிகள், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கும்படி மால்டா மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

முதல் கட்டமாக வட்டார வளர்ச்சி அதிகாரியின் விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளதாகத் தெரிகிறது. மேற்கு வங்கத்தில் தேர்தலின் போது வன்முறைகள் நிகழ வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணைய கூட்டத்தில் ஏற்கெனவே தெரிவிக்கப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x