Published : 05 Apr 2014 03:54 PM
Last Updated : 05 Apr 2014 03:54 PM

தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கு 1318 பேர் வேட்புமனு தாக்கல்: பரிசீலனை நாளை நடக்கிறது

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் சனிக்கிழமை பிற்பகல் 3 மணியுடன் முடிவடைந்தது. தமிழகத்தில் 39 தொகுதிகளில் போட்டியிட 118 பெண்கள் உள்பட மொத்தம் 1318 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

நாடாளுமன்ற மக்களவைக்கு ஏப்ரல் 7-ம் தேதி (நாளை) தொடங்கி மே 12-ம் தேதி வரை 9 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 117 தொகுதிகளுக்கு 6-வது கட்டமாக ஏப்ரல் 24-ம் தேதி தேர்தல் நடக்கிறது.

ஒரே கட்ட வாக்குப்பதிவு

தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 29-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் அதிமுக, திமுக உள்ளிட்ட பிரதான கட்சிகளைச் சேர்ந்த யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. சில இடங்களில் மட்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி கட்சிகளைச் சேர்ந்தவர்கள், சுயேச்சைகள் என 63 பேர் மட்டுமே முதல் நாளில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

அடுத்த 2 நாட்கள் விடுமுறை தினம் என்பதால் மனு தாக்கல் நடக்கவில்லை. கடந்த செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் மனு தாக்கல் தொடங்கியது. புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் ஒரே நாளில் மனு செய்தனர். அதன்பிறகு வேட்புமனு தாக்கல் சூடுபிடித்தது. சனிக்கிழமை பிற்பகல் 3 மணியுடன் மனு தாக்கல் முடிவடைந்தது.

மனு தாக்கலுக்கு கடைசி நாளான சனிக்கிழமை ஒரு நாளில் மட்டும் தென்சென்னை தொகுதியில் 24 பேர் மனு செய்துள்ளனர். இந்த தொகுதியில் மொத்தம் 46 பேரும், வடசென்னையில் 58 பேரும் மத்திய சென்னையில் 25 பேரும் மனு செய்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் மொத்தம் 1318 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களில் 118 பேர் பெண்கள். அதிகபட்சமாக வடசென்னை தொகுதியில் 58 பேரும், குறைந்தபட்சமாக திருவண்ணாமலையில் 11 பேரும் மனு செய்துள்ளனர்.

மனுக்கள் மீதான பரிசீலனை நாளை (திங்கள்கிழமை) நடக்கிறது. மனுக்களை வாபஸ் பெற 9-ம் தேதி கடைசி நாளாகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். சுயேச்சை வேட்பாளர்களுக்கு அன்றைய தினமே சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

5 முனைப் போட்டி

இந்தத் தேர்தலில் தமிழகத்தில் 5 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. ஆளும்கட்சியான அதிமுக தனித்துப் போட்டியிடுகிறது. திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், மமக உள்ளிட்ட கட்சிகள் சேர்ந்துள்ளன. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக, பாமக, மதிமுக, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி, ஐஜேகே ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து தனி அணியாகவும், காங்கிரஸ் கட்சி தனித்தும் போட்டியிடுகின்றன. இதனால், தமிழகத்தில் 5 முனைப் போட்டி நிலவுகிறது.

ஆலந்தூர் சட்டசபை தொகுதியில் 19 பேர் மனு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x