Published : 02 May 2014 09:45 AM
Last Updated : 02 May 2014 09:45 AM

மோடி மீதான வழக்கு விசாரணை தொடங்கியது

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தை மீறியதாக பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் அகமதாபாத் குற்றப்பிரிவு போலீஸார் வியாழக்கிழமை விசாரணை தொடங்கினர்.

தேர்தல் ஆணையத்தின் உத்தர வின்பேரில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 126(1)(ஏ)ன் கீழ் மோடி மீது புதன்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வாக்குச் சாவடியிலிருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் நிருபர் கூட்டம் நடத்துவதை இந்த பிரிவு தடை செய்கிறது.

அகமதாபாத்தில் உள்ள ராணிப் பகுதி பள்ளிக்கூடத்தில் புதன் கிழமை வாக்களித்த பிறகு நிருபர்க ளுக்குப் பேட்டி அளித்தார் மோடி. அப்போது அவர் கட்சியின் தாமரைச் சின்னத்தை காட்டினார்.

அரசு சார்பில் மோடி மீது புகார் செய்தவர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹர்பால் ரதோட். இந்த குற்றச்செயல் காவல்துறை விசாரணை வரம்பில் வருகிறது. மோடி கலந்து கொண்ட நிருபர் கூட்ட செய்திகளை வெளியிட்டதற்காக டிவி சேனல்கள் மீதும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 126(1)(பி) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. டிவி சேனல்கள் மீதான வழக்கை காவல்துறை விசாரிக்க முடியாது. எனவே நீதிமன்றத்தை அணுகி அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என குற்றப்பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x