Published : 17 May 2014 03:53 PM
Last Updated : 17 May 2014 03:53 PM

பாஜகவுக்கு வாக்களித்த மக்கள் வருந்துவர்: மாயாவதி

தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்த மக்கள் பின் நாளில் அதை நினைத்து வருந்துவார்கள் என உ.பி. முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கையில் நடைமுறைக்கு சாத்தியமற்ற வாக்குறுதிகளையே அளித்துள்ளன. எனவே பாஜகவுக்கு வாக்களித்தவர்கள் வருந்துவார்கள் என செய்தியாளர்களிடம் பேசிய மாயாவதி தெரிவித்துள்ளார்.

16-வது மக்களவை தேர்தலில் பாஜக தனிப் பெரும்பான்மை பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் 80 தொகுதிகளில் 71 தொகுதிகளை பாஜக கைப்பற்றியுள்ளது. சமாஜ்வாதி கட்சி 5 இடங்களையும், காங்கிரஸ் 2 இடங்களையும் கைப்பற்றியது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மாயாவதி: "ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீதான எதிர்ப்பு அலை தேர்தலில் பிரதிபலித்துள்ளது. ஐக்கிய முற்போக்கு அரசுக்கு ஆதரவாக இருந்த கட்சிகள் மீது கூட மக்கள் தங்கள் கோபத்தை காட்டியுள்ளனர்.

கடந்த தேர்தலில் 1.51 கோடி வாக்கே பெற்றோம் ஆனால் இந்த முறை 1.60 கோடிக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளோம். தலித் மக்கள் மத்தியில் எங்களுடைய வாக்கு வங்கி அப்படியே உள்ளது.

இஸ்லாமியர்கள் மற்றும் உயர் வகுப்பினர் வாக்குகள் பிரிந்ததால் எங்களால் வெற்றி பெற முடியவில்லை. இதற்கு காரணம் பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி போன்ற கட்சிகளின் பிரச்சார யுக்தியே ஆகும். அவர்கள் மக்களை திசை திருப்பும் வகையில் பிரச்சாரம் செய்தனர்". என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x