Published : 04 May 2014 10:15 AM
Last Updated : 04 May 2014 10:15 AM

பிரசார் பாரதி சுதந்திரத்தில் தலையிடுவதில்லை: மோடி புகாருக்கு மணீஷ் திவாரி பதில்

பிரசார் பாரதியின் சுதந்திரத்தில் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை தலையிடுவதில்லை என்று மத்திய அமைச்சர் மணீஷ் திவாரி கூறியுள்ளார்.

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் பேட்டியை பிரசார் பாரதி முழுமையாக ஒளிபரப்பாமல் முக்கிய கருத்து களை வெட்டி விட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்து மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் மணீஷ் திவாரி கூறுகையில், “பிரசார் பாரதி என்பது நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட தன்னாட்சி பெற்ற அமைப்பாகும். துார்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலியை இந்த அமைப்பு கட்டுப்படுத்தி வருகிறது. மத்திய தகவல் ஒலிபரப்புத் துறைக்கும் பிரசார் பாரதிக்கும் இடையே பெரும் இடைவெளி உள்ளது.

பத்திரிகை சுதந்திரம் பற்றி மோடி கவலைப்படுகிறார். குஜராத் தில் பத்திரிகை சுதந்திரம் பாதிக்கப் பட்டுள்ளது குறித்து காங்கிரஸும் கவலைப்படுகிறது. அங்கு பத்திரிகையாளர்கள் தாங்கள் துன்புறுத்தப்படுவதாகவும், சட்டசபைக்குள் நுழைய விடாமல் தடுக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்” என்றார்.

இந்நிலையில் மோடியை பேட்டி எடுத்த துார்தர்ஷன் நிருபர் அசோக் வத்சவ் கூறுகையில், “மோடியின் பேட்டி 56 நிமிடங்கள் இருந்தது. ஆனால் அதில் 34 நிமிடங்கள் மட்டுமே ஒளிபரப்பப்பட்டது. அவர் பிரியங்கா குறித்தும், அகமது படேல் குறித்தும் குறிப்பிட்ட முக்கிய பகுதிகளை வெட்டியிருக்க கூடாது என்பது என் கருத்து” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x