Published : 02 May 2014 08:40 AM
Last Updated : 02 May 2014 08:40 AM

தேர்தல் ஆணையத்திடம் மோடி மன்னிப்பு தெரிவிக்க வேண்டும்: ப.சிதம்பரம் வலியுறுத்தல்

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதால் எதிர்பாராத வகையில் சிக்கிக்கொண்ட பாஜக வேட்பாளர் நரேந்திர மோடி, தன்னை மன்னிக்கும்படி கோரி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் நிதி அமைச்சர் ப.சிதம்பரம்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நிருபர்களுக்கு வியாழக்கிழமை பேட்டி அளித்தபோது அவர் கூறியதாவது:

தவறு செய்துவிட்டு யாராவது எதிர்பாராத வகையில் சிக்கிக் கொண்டால் அதற்கு மன்னிப்பு கேட்பதுதான் கண்ணியமானதாகும். குஜராத் காந்திநகரில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதால் மோடி புதன்கிழமை சிக்கிக்கொண்டார்.

தனக்கு எதிராக குஜராத் மாநில நிர்வாகம் வழக்கு பதிவு செய்வதற்கு அரசியல் சதி காரணம் என மோடி கூறுவதை ஏற்கமுடியாது. காங்கிரஸ் உள்பட பிற கட்சிகள் மீது எத்தனையோ புகார்களை கொடுத்துள்ளது பாஜக. இவையெல்லாம் அரசியல் சதிகள் என்றால் இதுவும் அரசியல் சதிதான். இவ்வாறு சிதம்பரம் கூறினார்.

தனக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது காங்கிரஸின் சதி என்றும் காங்கிரஸ் நடுக்கத்தில் உள்ளதை இது காட்டுவதாகவும் மோடி புதன்கிழமை குறிப்பிட்டார்.

திருப்பதியில் பேசிய மோடி, ‘வழக்குப் பதிவு செய்யும் அளவுக்கு நான் எந்த தவறும் செய்யவில்லை. பொதுமக்களுக்கு தாமரை வில்லையைத் தான் காட்டினேன்’ என்று தெரிவித்தார்.

குஜராத் மாநிலம் காந்திநகரில் புதன்கிழமை வாக்களித்து விட்டு வெளியே வந்ததும், நிருபர்களிடம் பேசிய மோடி, தாமரை சின்னத்தை காட்டி பேசினார். காங்கிரஸ் கட்சியையும் கடுமையாக சாடி பிரச்சாரம் போலவே பேசினார்.

இது தொடர்பான வீடியோ பதிவை பார்த்த தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதிகளை மோடி மீறி இருப்ப தாக தெரிவித்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யும்படி குஜராத் நிர்வாகத்துக்கு உத்தர விட்டது. அதன்படி 2 வழக்குகள் மோடி மீது பதிவு செய்யப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x