Published : 25 Apr 2014 09:57 AM
Last Updated : 25 Apr 2014 09:57 AM
சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய பாஜக வேட்பாளர் கிரிராஜ் சிங்குக்கு முன் ஜாமீன் வழங்கி பாட்னா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம், தியோகர் பகுதியில் கடந்த 21-ம் தேதி நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பாஜக பிஹார் மாநில மூத்த தலைவர் கிரிராஜ் சிங் பேசும்போது ‘‘நரேந்திர மோடியை பிரதமராகவிடாமல் தடுப்பவர்கள், பாகிஸ்தானுக்குச் செல்லத் தயாராக இருங்கள். மோடியை விமர்சிப்பவர்களுக்கு வருங்காலத்தில் (தேர்தலுக்குப் பிறகு) இந்தியாவில் இடமில்லை. அவர்கள் வசிக்க பாகிஸ்தானில்தான் இடம் கிடைக்கும்” என கூறியிருந்தார்.
கிரிராஜ் சிங் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது கருத்துக்கு பாஜகவும் கூட கண்டனம் தெரிவித்தது. மேலும், மோடி தனது ட்விட்டர் வலைபக்கத்தில் 'பொறுப்பற்ற விமர்சனங்களை கட்சியினர் தவிர்க்க வேண்டும்' என கூறியிருந்தார்.
இந்நிலையில், கிரிராஜ்சிங் மீது, இந்திய கிரிமினல் தண்டனை சட்டப்பிரிவுகள் 153 ஏ, 295 ஏ, 298 ஆகியனவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பீகார் நீதிமன்றம் அவரை கைது செய்ய ஆணை பிறப்பித்து உத்தரவிட்டது.
ஏற்கெனவே கிரிராஜ் சிங் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் பொகாரோ போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இத்தகைய சூழலில், முன் ஜாமீன் கோரி கிரிராஜ் சிங் பாட்னா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த பாட்னா மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிபதி பீரேந்திர குமார், கிரிராஜ் சிங்குக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT