Published : 08 Apr 2014 12:21 PM
Last Updated : 08 Apr 2014 12:21 PM

பாஜக தேர்தல் அறிக்கை வண்ணக் காகிதங்களில் மறைக்கப்பட்ட மதவாதம்: அந்தோணி

பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை வண்ணக் காகிதங்களில் மறைக்கப்பட்ட மதவாத கோட்பாடுகள், இவை நாட்டின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் என மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி விமர்சித்துள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வந்த அந்தோணி முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், பாஜக தேர்தல் அறிக்கை அக்கட்சியின் மதவாத கொள்கையை தெளிவாக உணர்த்துகிறது என்றார்.

மேலும் அவர் கூறியதாவது, "ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து மீதான அக்கட்சியின் நிலைப்பாடு, பிரிவினைவாதிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் சாதகமாக் அமையும்.

ஆப்கன் அதிபர் தேர்தல் முடிவுகளை இந்தியா ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையில் பாஜக தேர்தல் அறிக்கையில் காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து குறித்து வெளியாகியுள்ள கருத்து எல்லை பிரச்சினைகளை அதிகரிக்கும். குறிப்பாக ஆப்கனில் இந்தியாவுக்கு விரோதமான ஆட்சி அமையும் பட்சத்தில் எல்லை பிரச்சினை மேலும் வலுக்கும்.

காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்தை திரும்பப்பெறும் முடிவு பிரிவினையையே ஊக்குவிக்கும் ஆனால் இத்தருணத்தில் தேசத்திற்கு தேவையானது உணர்வுப்பூர்வமான ஒற்றுமையே.

மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் நாடு எதிர்கொள்ளவிருக்கும் அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு மக்கள் மீண்டும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கே வாக்களிப்பார்கள். மதச்சார்பற்ற கட்சிகளின் உதவியோடு, ஐ.மு.கூட்டணி மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும்". இவ்வாறு அந்தோணி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x