Published : 26 Apr 2014 08:55 AM
Last Updated : 26 Apr 2014 08:55 AM

தனியார் பஸ்ஸில் ரூ.8 கோடி பறிமுதல்: ஆந்திராவில் பரபரப்பு

ஹைதராபாத் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை, தனியார் சொகுசு பஸ்ஸில் கொண்டு வரப்பட்ட ரூ.8 கோடியை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி, பணத்தை எடுத்து வந்த 5 பேரை கைது செய்தனர்.

தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும் பணம் மற்றும் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

இதுவரை ரூ.240 கோடிக்கும் மேல் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் மட்டும் ரூ.102 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை பெங்களூரில் இருந்து ஹைதராபாத் வந்துகொண்டிருந்த ஒரு சொகுசு பஸ்ஸை, ரங்காரெட்டி மாவட்டம், பாலமாகுலாவில் போலீஸார் நிறுத்தி சோதனையிட்டனர்.

அப்போது, பஸ்ஸின் கீழ் பகுதியில் பயணிகளின் பொருள்களை வைக்கும் இடத்தில் சோதனை செய்தனர். அங்கு, 8 பைகளில் தலா ஒரு கோடி என மொத்தம் ரூ. 8 கோடி இருந்தது.

இது தொடர்பாக போலீஸார் பஸ்ஸில் இருந்த அனைத்து பயணிகளிடமும் விசாரணை நடத்தினர். பணத்தை எடுத்து வந்த 5 பேரை கைது செய்தனர். ஹைதராபாத்தில் நகை வாங்குவதற்காக பணத்தை கொண்டு வந்ததாக கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்களிடம் முறையான ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x