Published : 25 Apr 2014 08:46 PM
Last Updated : 25 Apr 2014 08:46 PM

மோடி ஊர்வலம் மீது புகார் கூறுவது காங்கிரஸின் விரக்தியை காட்டுகிறது: பாஜக

மோடி ஊர்வலத்துக்கு எதிராக தேர்தல் ஆணையத்திடம் புகார் கூறுவது, காங்கிரஸின் விரக்தியையே காட்டுகிறது என்று பாஜக செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நேற்று வாரணாசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அவருடன் நூற்றுக்கணக்கான மக்கள் ஊர்வலமாக வந்ததை காட்சி ஊடகங்கள் ஒளிபரப்பியது. இந்தச் செயல் அப்பட்டமான தேர்தல் விதிமீறல் என்று காங்கிரஸ் செய்தித்தொ டர்பாளரும், மத்திய அமைச்சருமான ஆனந்த் சர்மா கூறினார்.

மேலும், வாக்காளர்களைக் கவரும் வகையில், வாக்குப்பதிவு நடக்கும் நேரத்தில் நரேந்திர மோடி வேட்புமனு பதிவு செய்ய சென்ற காட்சி ஒளிபரப்பப்பட்டது விதிமீறல் என்றும், நரேந்திர மோடி மீது தேர்தல் ஆணையம் தானாகவே முன் வந்து நடவடிக்கை எடுப்பதோடு, அந்த ஊர்வலத்தில் பங்கேற்ற அனைவரின் மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சியின் மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்தார். இந்த ஊர்வல ஒளிப்பரப்பிற்கு சமாஜ் வாடி, பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக பாஜக செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர், "காங்கிரஸ் கட்சி எதிர்கொள்ளவிருக்கும் தோல்வியை சமாளிக்க மோடி மீது தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது" என்றார்.

மேலும் அவர் கூறுகையில், "காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் அக்கட்சியின் விரக்தி தன்மையை வெளிப்படுத்துகின்றனர். மோடி மீது அவர்கள் வீசும் தடைக் கற்கள் அனைத்தும் பூக்களாக மாறும். மக்கள் அதற்கு ஜனநாயக முறையில் பதில் அளிப்பார்கள்.

நரேந்திர மோடி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தபோது, வாரணாசி மக்கள் அமோக ஆதரவு அளித்தனர். காங்கிரஸ் தனது நிலையிலிருந்து முற்றிலும் கீழ் இறங்கிவிட்டது. அந்த நிலைபாட்டின் வெளிப்பாடாகத்தான் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கிறது. தலைவர்கள் ஊர்வலமாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்வது ஒன்றும் தவறு இல்லை" என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x