Published : 20 Apr 2014 12:37 PM
Last Updated : 20 Apr 2014 12:37 PM

மோடியால் மாற்றத்தைக் கொண்டு வர முடியாது: அசாமில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேச்சு

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியால், நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

அசாம் மாநிலம், நாகானில் சனிக்கிழமை நடைபெற்ற தேர் தல் பிரச்சாரக் கூட்டத்தில் காங் கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது: குஜராத் மாதிரியைப் பற்றி மோடி பேசுகிறார். அந்த மாநிலத்தில் அவர் என்ன செய்துள்ளார்? விவசாயிகளிடமிருந்து 35 ஆயிரம் ஏக்கர் நிலத்தைப் பறித்து தொழிலதிபர் அதானிக்கு ஒரு சதுர மீட்டர் நிலம் ரூ.1 என்ற விலைக்கு வழங்கியுள்ளார்.

அந்த நிலத்தை சதுர மீட்டர் 800 ரூபாய்க்கு அதானி விற்றுவிட்டார். ரூ. 3 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டிக்கொண்டிருந்த அதானியின் நிறுவனம், இப்போது ரூ. 40 ஆயிரம் கோடியை ஈட்டியுள்ளது. அந்த நிலத்தின் மூலம் உற்பத்திச் செயல் ஏதும் நடைபெறவில்லை. இதைத்தான் குஜராத் மாதிரி என்று மோடி அழைக்கிறார்.

மிட்டாய் ஒன்று ஒரு ரூபாய்க்கு கிடைக்கிறது. நீங்கள் அதானியாக இருந்தால், அந்த ஒரு ரூபாய் மிட்டாயை கொடுத்து குஜராத்தில் ஒரு சதுர மீட்டர் நிலம் வாங்கி விடலாம். ஜவுளி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆண்டாண்டு காலமாக குஜராத் மக்கள் மேற்கொண்ட கடுமையான உழைப்பின் விளைவாகத்தான் அந்த மாநிலம் வளர்ச்சியடைந்துள்ளது. மோடியால் அல்ல.

இந்தியாவில் மாற்றத்தைக் கொண்டு வந்துவிடுவேன் என்று மோடி கூறுகிறார். தனி நபரால் எந்த விதமான மாற்றத்தையும் கொண்டு வர முடியாது. கோடிக் கணக்கான மக்களின் கூட்டு முயற்சியால்தான் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வடகிழக்கு மாநிலங்களில் சாலை, ரயில் வசதிகள் ஏற்படுத்தப்படும். இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் மட்டுமல்ல, தெற்காசியாவின் பிற நாடுகளுடன் இணைக்கும் வகையில் போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும்.

அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் தொழில் உற்பத்தி யைப் பெருக்க நடவடிக்கை எடுப் போம். அதன் மூலம் பலருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இப்போது சீனத் தயாரிப்பு என்ற வாசகம் அடங்கிய ஏராளமான பொருள்கள் சந்தையில் விற்பனை யில் உள்ளன. விரைவில் இந்திய தயாரிப்பு, அசாம் தயாரிப்பு, நாகான் தயாரிப்பு என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பொருள்கள் சந்தையில் விற்பனையாக வேண்டும் என்பதே எனது விருப்பம். அதற்கான நடவடிக்கைகளை எடுப்போம் என்றார்.

பலாத்காரத்தில் மேற்கு வங்கம் முதலிடம்

மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாதில் சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது: மேற்கு வங்கத்தில் முதல்வராக பெண் ஒருவர் (மம்தா பானர்ஜி) இருந்த போதிலும், நாட்டிலேயே இங்குதான் பெண்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். பாலியல் பலாத்காரத்தில் நாட்டிலேயே முதல் மாநிலமாக மேற்கு வங்கம் திகழ்கிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசு தரவில்லை என்று மம்தா பானர்ஜி கூறி வருவது பொய்யான தகவல் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x