Last Updated : 11 Apr, 2014 12:09 PM

 

Published : 11 Apr 2014 12:09 PM
Last Updated : 11 Apr 2014 12:09 PM

காலையிலேயே வாக்களித்த நேரு குடும்பத்தினர்: செய்தியாளர்களைத் தவிர்த்த ராகுல், சோனியா

மக்களவைக்கு மூன்றாம் கட்டமாக வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தலில் காலை 11.30 மணிக்குள்ளாகவே நேரு குடும்பத்தினர் வாக்களித்தனர். இதற்காக வந்த அவர்கள், வழக்கத்திற்கு மாறாக செய்தியாளர்களிடம் பேசாமல் சென்று விட்டனர்.

டெல்லியில் மொத்தம் உள்ள ஏழு தொகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்காக, காலை 9.30 மணிக்கு மத்திய டெல்லியில் உள்ள நிர்மான் பவன் வாக்குச்சாவடிக்கு வந்தார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. பாதுகாப்பு காரணமாக வரிசையில் நிற்காமல் நேரடியாக உள்ளே சென்று வாக்களித்து விட்டு திரும்பினார்.

வழக்கமாக, தேர்தலின்போது வாக்களித்துவிட்டு செல்லும் போது, செய்தியாளர்களிடம் ஒருசில வார்த்தைகள் பேசி விட்டு செல்லும் சோனியா, இந்தமுறை அதை செய்யவில்லை. அவருடன், முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸின் செய்தி தொடர்பாளருமான அஜய் மக்கான் மற்றும் டெல்லி மாநில காங்கிரஸ் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான அர்விந்த் சிங்லவ்லியும் வந்திருந்தனர்.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி 10.20-க்கு அவுரங்கசீப் சாலையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். வாக்குச்சாவடியில் இருந்து வெளியில் வந்த அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்க முயன்றனர். அப்போது, லேசான புன்னைகையையே பதிலாக அளித்துவிட்டு கிளம்பி விட்டார் ராகுல். இவருடனும் லவ்லி மற்றும் மக்கான் ஆகியோர் வந்தனர்.

இந்த இருவரும் வாக்களித்த புது டெல்லி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அஜய் மக்கான் மீண்டும் போட்டியிடுகிறார். இவர் கடந்த 2 முறை தொடர்ந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் மக்கான் கூறுகையில், ‘‘டெல்லியில் நான்கு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்தவர்கள் காங்கிரஸ் வாக்காளர்கள். அப்போது கேஜ்ரிவாலுக்கு வாக்களித்து செய்த தவறை மீண்டும் செய்ய மாட்டார்கள்’’ என நம்பிக்கை தெரிவித்தார். எனவே, கடந்த தேர்தலில் டெல்லியில் பெற்ற அனைத்து ஏழு தொகுதிகளையும் மீண்டும் காங்கிரஸ் பெறும் எனவும், மோடி அலை வீசுவதாகக் கூறுவது தவறானது எனவும் அஜய் மக்கான் கருத்து கூறினார்.

பாஜக சார்பில் உபியின் சுல்தான்பூரில் போட்டியிடும் நேரு குடும்பத்து மற்றொரு வாரிசான வருண் காந்தி, நிர்மான் பவன் வாக்குச்சாவடியில் நன்பகலில் வாக்களித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x