Published : 07 Apr 2014 10:00 AM
Last Updated : 07 Apr 2014 10:00 AM

குஜராத்தில் 11 லட்சம் வீடுகளில் மின் இணைப்பு இல்லை: மோடி நிர்வாகத்தை விமர்சித்து தா.பாண்டியன் பேச்சு

சேது சமுத்திரத் திட்டத்தை தடுத்து நிறுத்தியவர் ஜெயலலிதா. இதன் மூலம் தமிழக மக்களுக்கு ஜெயலலிதா துரோகம் செய்துள்ளார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் தா.பாண்டியன் குற்றம்சாட்டினார்.

சிவகங்கை மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் கிருஷ்ணனை ஆதரித்து தா.பாண்டியன் சனிக் கிழமை இரவு காரைக்குடியில் பேசியதாவது:

பா.ஜ.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் ரகசிய தொடர்பு உள்ளது. தேர்தலுக்குப் பிறகு கூட்டணியில் சேருவதற்கு கம்யூனிஸ்டுகள் தடையாய் இருப்பார்கள் எனக் கருதி கம்யூனிஸ்டுகளை கழற்றி விட்டுள்ளார்.

சேது சமுத்திரத் திட்டத்தை தடுத்து நிறுத்தியவர் ஜெயலலிதா. நம்பிய தமிழக மக்களுக்கு அவர் துரோகம் செய்துள்ளார்.

தமிழகத்தில் கூடங்குளம் அணு மின்நிலையத்திற்கு வைகோ எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அவர் கூட்டணி வைத்துள்ள மோடியின் குஜராத்தில் உள்ள 9 அணு மின்நிலையங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பாரா?

ராஜபட்சேவை போர்க்குற் றவாளியாக அறிவிக்கக் கோரும் வைகோ, குஜராத் கோத்ரா கலவரத்தை மறந்துவிட்டுப் பேசுகிறார். ராஜஸ்தானில் 38 எண்ணெய்க் கிணறுகளைக் கைப்பற்றவே, முகேஷ் அம்பானி, மோடியை பிரதமராக்க செலவு செய்கிறார்.

மோடியை பிரதமராக்கினால் நாட்டின் வளத்தையே வளைத்துப் போடலாம் என அம்பானி முயற்சிக்கிறார். குஜராத்தில் உபரி மின்சாரம் இருந்தும், 11 லட்சம் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது.

இந்தியா பரம ஏழை நாடு என்கிறார்கள். ஆனால் சுவீடன் நாட்டு வங்கியில் ரூ.70 லட்சம் கோடி கறுப்புப் பணமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதை மீட்கும் முயற்சியில் காங். அரசு ஈடுபடவில்லை. இதில் நிதி அமைச்சர் ப.சிதம்பரமும் அக்கறை காட்டவில்லை.

அமெரிக்கா, ஜெர்மன் போன்ற நாடுகள் எல்லாம் சுவீடன் வங்கிப் பணத்தை மீட்டுள்ளன. இந்தியா மட்டும் பணத்தை மீட்பதில் அக்கறை காண்பிக்கவில்லை. பணத்தை மீட்பதில் காங்., பாஜக ஒத்த கருத்தை கொண்டுள்ளன என்றார்.

அப்போது சிவகங்கை தொகுதி எம்எல்ஏ குணசேகரன் உடன் இருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x