Published : 10 Apr 2014 07:46 PM
Last Updated : 10 Apr 2014 07:46 PM

மோடி பிரதமரானால் நாடே கலவர பூமியாகும்: மாயாவதி

நரேந்திர மோடி பிரதமரானால் நாடே கலவர பூமியாகும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும், உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான மாயாவதி கடுமையாக சாடினார்.

உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்மிபூர் கேரியில் உள்ள கல்லூரி மைதானத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசியது:

"நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக பாஜக முன்னிறுத்தியுள்ளது. மோடியின் ஆட்சியில்தான் குஜராத்தில் 2002-ஆம் ஆண்டு கலவரம் நடந்தது. அத்தகைய நபர், மத்தியில் ஆட்சிக்கு வந்தால், நாடு முழுவதும் கலவரம் ஏற்படும்.

உத்திரப் பிரதேசத்தை ஆளும் சமாஜ்வாதி கட்சி, ஆட்சிக்கு வந்ததிலிருந்து மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு காணாமல் போய்விட்டன. ரவுடிகளும், மாஃபியாக்களுமே ஆதிக்கம் செலுத்துகின்றனர். கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்முறை மற்றும் கலவரங்கள் ஆகியவை நித்தமும் நடந்து வருகின்றன.

முசாபர்நகர் மற்றும் ஷாம்லி பகுதியில் நடந்த கலவரத்தில் இஸ்லாமிய சமுதாயத்தினரே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்தியில் பாஜக ஆட்சி அமைப்பதைத் தடுக்க இஸ்லாமிய சமூகத்தினர் ஒன்றுபட வேண்டும். அவர்களது ஒன்றுபட்ட ஆதரவு பகுஜன் சமாஜ் கட்சிக்கே கிடைக்க வேண்டும். இஸ்லாமியர்களிடையே பிரிவினை ஏற்பட்டால் பாஜக பயனடையும்.

பாஜக தனது தனது 6 ஆண்டு கால ஆட்சியில் நாட்டிற்காகவும், ஏழை மக்களுக்காவும், நலிவடைந்தவர்களுக்காகவும் எதையும் செய்யவில்லை.

உத்திரப் பிரதேசத்தையும், பிற்படுத்தப்பட்டோரையும், சிறுபான்மையினரையும், தலித் சமூகத்தினரையும் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் கண்டுகொள்ளவே இல்லை" என்றார் மாயாவதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x