Published : 22 Apr 2014 08:27 AM
Last Updated : 22 Apr 2014 08:27 AM

இன்று முதல் 3 நாட்களுக்கு மதுபானம் விற்றால் 6 மாதம் சிறை: தனியார் ஹோட்டல்களுக்கு பிரவீண்குமார் எச்சரிக்கை

தேர்தலையொட்டி தடை செய்யப்பட்ட காலத்தில் மதுபானம் விற்றால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தனியார் ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளுக்கு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களிடம் திங்கள்கிழமை அவர் கூறியதாவது:

மக்களவைத் தேர்தலையொட்டி 22-ம் தேதி (இன்று) காலை 10 மணி முதல் 24-ம் தேதி நள்ளிரவு வரை 3 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மற்றும் தனியார் ஹோட்டல்களில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்களில் தனியார் விடுதிகள், நட்சத்திர ஹோட்டல்கள், கடைகள், பொதுஇடங்களில் யாராவது மது விற்பனை செய்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும்.

வாக்குப்பதிவு நாளான 24-ம் தேதி அனைத்து நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதையும் மீறி, விடுமுறை அளிக்காவிட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யப்படும்.

ஏதாவது தனியார் நிறுவனம் விடுமுறை அளிக்காவிட்டால் அதுகுறித்து 1950 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். அந்தப் பகுதி தேர்தல் அதிகாரி சம்பந்தப்பட்ட நிறுவனத்தை ஆய்வு செய்து அளிக்கும் அறிக்கை அடிப்படையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

பார்வையற்றோர் வாக்களிக்க வரும்போது அவருடன் துணைக்கு வருபவர் வாக்குச்சாவடிக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார். சிறையில் இருப்பவர்களில், தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் மட்டும் தபால் ஓட்டு போட முடியும். மற்றவர்கள் ஓட்டு போட முடியாது. முப்படையினர், தேர்தல் பணியில் ஈடுபடும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வெளிமாநிலத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் தமிழக போலீஸார், தூதரக அதிகாரிகள் ஆகியோர் தபாலில் வாக்களிக்கலாம். 22-ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் யாரும் கருத்துக்கணிப்பு வெளியிடக்கூடாது. இவ்வாறு பிரவீண்குமார் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x