Published : 11 Apr 2014 10:06 PM
Last Updated : 11 Apr 2014 10:06 PM

பேரணி, பொதுக்கூட்டம் நடத்த அமித் ஷா, ஆசம் கானுக்கு தடை

பாஜக தலைவரும், நரேந்திர மோடிக்கு நெருக்கமானவருமான அமித் ஷா, சமாஜ்வாதி தலைவரும், உத்தரப் பிரதேச அமைச்சருமான ஆசம் கான் ஆகியோர் உத்தரப் பிரதேசத்தில் பிரச்சாரம் செய்யவும், பொதுக் கூட்டம் நடத்தவும் தேர்தல் ஆணையம் நேற்று தடை விதித்தது.

பிரசாரத்தின்போது வன்முறை, வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும் பிரிவினையை ஏற்படுத்தும் வகையிலும் பேசியதற்காக அவர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவர் மீதும் குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஆசம் கான் மீது நடவடிக்கை எடுப்பதில் உத்தரப் பிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாதி கட்சி மென்மையான போக்கை கையாண்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது. பிரச்சினை ஏற்படுத்தும் விவகாரத்தை மாநில அரசு எச்சரிக்கையுடன் கையாளவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் தலைமையில் நேற்று நடைபெற்ற தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூட்டத்தில் அமித் ஷா, ஆசம் கான் ஆகியோருக்கு தடை விதிக்கும் முடிவு எடுக்கப்பட்டது. கார்கில் போரை வென்று கொடுத்தது முஸ்லிம் ராணுவ வீரர்கள்தான் என்று தேர்தல் பொதுக் கூட்டத்தில் ஆசம் கான் பேசினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

முசாபர் நகர் கலவரத்துக்கு காரணமானவர்களை பழி வாங்கவேண்டும் என்றால் பாஜகவுக்கு வாக் களிக்க வேண்டும் என்று தேர்தல் பிரசாரத்தின்போது அமித் ஷா பேசினார். இவர்கள் இருவர் பேசியதுமே மக்களிடையே வெறுப்புணர்வையும், விரோதத்தையும், பிரி வினையும் தூண்டும் வகையிலானது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசை தேர்தல் ஆணையம் கடுமையாக குறை கூறியுள்ளது. முக்கியமாக ஆசம் கான் மீது முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யப்படவில்லை என்று சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x