Published : 23 Apr 2014 09:15 AM
Last Updated : 23 Apr 2014 09:15 AM

வதந்தி பரப்புவதை நிறுத்துங்கள்: காங்கிரஸுக்கு நரேந்திர மோடி அறிவுரை

பொது சிவில் சட்டம் பற்றி பாஜக மீது வீண் வதந்திகளைப் பரப்புவதை காங்கிரஸ் நிறுத்திக் கொள்ள வேண்டும் என பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் நந்துர்பர் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நரேந்திர மோடி இது தொடர்பாகக் கூறியதாவது:

பாஜக ஆட்சிக்கு வந்தால், பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வந்து, பழங் குடியினரின் உரிமையைப் பறித்து விடும் என காங்கிரஸ் சொல்லி வருகிறது.

இதுபோன்ற பொய்களைப் பரப்புவதை காங்கிரஸ் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

பழங்குடியினருக்கான உரிமைகளை காங்கிரஸோ பாஜகவோ அளிக்கவில்லை. பாபா சாகேப் அம்பேத்கர்தான் அவர்களுக்கு அளித்தார்.

இத்தொகுதியின் காங்கிரஸ் எம்.பி.யான மாணிக்ராவ் காவித், இத்தொகுதிக்காக எதுவும் செய்யவில்லை. நந்துர்பருக்கு அருகே யுள்ள குஜராத் கிராமங்கள் இப்பகுதியை விட கூடுதல் வசதிகளைக் கொண்டுள்ளன.

1857-ம் ஆண்டு சுதந்திரப் புரட்சியின் போதிருந்து பழங்குடியினர் இத்தொகுதி யிலுள்ளனர்.

ஆனால், கடந்த 50 ஆண்டுகளில் பழங்குடியினருக்காக காங்கிரஸ் எதையும் செய்யவில்லை. வாஜ்பாய் அரசுதான் பழங்குடியினரை நினைவில் வைத்து, அவர்களுக்காக தனி அமைச்சகத்தை அமைத்தது. தனியாக பட்ஜெட் ஒதுக்கியது. மூன்று மாதங்களுக்கொரு முறை அது தொடர்பான அறிக்கையை அவர் பெற்றார்.

நான்கு மாநிலங்களில் உள்ள பாஜக அரசு, பழங்குடியினருக்கு நன்மை செய்யும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறது. மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் பழங்குடியினருக்கு ஏராளமான நலத்திட்டங்களைச் செயல்படுத்தி யுள்ளோம் என்றார்.

‘உயிர்த் தியாகத்தால் உருவானது தெலங்கானா’

ஆந்திர மாநிலம் நிஜாமாபாத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் நரேந்திர மோடி பேசியதாவது:

நடைபெறவுள்ள தேர்தல் குறிப்பாக தெலங்கானா மக்களுக்கு மிகவும் முக்கிய மானது. இதுவரை பல தேர்தலில் வாக் களித்து இருப்பீர்கள் ஆனால் இந்த தேர்தலில் தெலங்கானாவின் வளர்ச்சிக் காக வாக்களிக்க வேண்டும். தெலங் கானா வளர்ச்சி பெற மத்தியில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

தெலங்கானா மாநிலம் அமைய பலரது தியாகங்களே காரணம். தெலங்கானாவை காங் கிரஸ் உருவாக்கவில்லை; பலரின் உயிர்த் தியாகத்தால் உருவானது. இப் பகுதியை சேர்ந்த தலித் இன தலைவர் அஞ்சையாவை ராஜீவ் காந்தி அவமானப் படுத்தினார். தெலங்கானா பகுதியை சேர்ந்த முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவையும் காங்கிரஸ் அவமானப்படுத்தியது. அவரது பெயர் எங்கும் இல்லாதபடி காங்கிரஸ் பார்த்துக் கொண்டது என்றார் மோடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x