Published : 14 Apr 2014 03:08 PM
Last Updated : 14 Apr 2014 03:08 PM

விரக்தியில் இருக்கிறது காங்கிரஸ்: அருண் ஜேட்லி விமர்சனம்

காங்கிரஸ் கட்சி விரக்தியில் இருப்பதாக பாஜக அமிர்தசரஸ் தொகுதி வேட்பாளரும், கட்சியின் மூத்த தலைவருமான அருண் ஜேட்லி விமர்சித்துள்ளார்.

அமிர்தசரஸில் தேர்தல் பிரச்சாரத்தில் அருண் ஜேட்லி கூறியதாவது:

"காங்கிரஸ் கட்சி ஒரு குடும்பத்தைச் சுற்றியே சுழன்று கொண்டிருக்கிறது. மாறாக, காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பு வலுப்படுத்தப்பட வேண்டும். குடும்ப ஆதிக்கம் இனி மக்கள் மத்தியில் எடுபடாது.

தற்போது ராகுல் காந்தியை மக்கள் ஒரு வெற்றியாளராக பார்க்கவில்லை. இத்தகைய சூழலில் குடும்ப கட்டமைப்பில் இருந்து விடுபட்டு கட்சியை வலுவான கட்டுக்கோப்புடன் அமைப்பதே காங்கிரஸ் செய்ய வேண்டியதாகும்" என்றார்.

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அக்கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறாவிட்டால் முதல்வர் பதவி பறிபோகும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக எழுந்த பத்திரிகை செய்தி குறித்த கேள்விக்கு ஜேட்லி பதிலளித்தார்.

அப்போது அவர், "இது காங்கிரஸ் கட்சியின் விரக்தியின் வெளிப்பாடு. காங்கிரஸ் தோல்விக்கு ஆட்சிமுறை குறைபாடுகளும், மக்கள் மத்தியில் ராகுல் காந்திக்கு செல்வாக்கு இல்லாததுமே காரணமான இருக்கும். தோல்விக்கு காரணம் ஒரு குடும்பமாக இருக்கும்போது வெளியில் இருப்பவர்களை பலி ஆடாக ஆக்க நினைப்பது என்ன நியாயம்” என கேள்வி எழுப்பினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x